கவுதமாலாவில் மீண்டும் எரிமலை வெடிப்பு: பலி 72 ஆக உயர்வு; மீட்பு பணியில் சிக்கல்

கவுதமாலா நாட்டில் பியூகோ எரிமலை மீண்டும் வெடித்துள்ளது. இதில் பலி எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது. #VolcanoEruption
கவுதமாலாவில் மீண்டும் எரிமலை வெடிப்பு: பலி 72 ஆக உயர்வு; மீட்பு பணியில் சிக்கல்
Published on

கவுதமாலா சிட்டி,

கவுதமாலா நாட்டில் பியூகோ எரிமலை தலைநகர் கவுதமாலா சிட்டிக்கு அருகே அமைந்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஞாயிற்று கிழமை இந்த எரிமலை திடீரென்று வெடித்து சிதறியது. இதனை தொடர்ந்து ஏற்பட்ட கரும்புகை மற்றும் சாம்பலானது தலைநகர் உள்பட பிற பகுதிகளுக்கு பரவின.

இதில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது. எரிமலையால் சேதமடைந்துள்ள கிராமங்களில் இருந்து மீட்பு பணியாளர்கள் அதிக உடல்களை மீட்டுள்ளனர்.

அங்குள்ள வீடுகள், மரங்கள் மற்றும் வாகனங்கள் ஆகியவை சாம்பலால் மூடப்பட்டு உள்ளன. இதனால் மீட்பு பணியில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களது வீடுகளில் இருந்து வெளியேறி வேறு இடங்களுக்கு தப்பி சென்றுள்ளனர்.

எரிமலையில் இருந்து 10 கி.மீட்டர் உயரத்துக்கு வானில் சாம்பல் புகை பரவியிருந்தது.

இந்த நிலையில் எரிமலை மீண்டும் வெடித்துள்ளது. அதில் இருந்து வெப்ப வாயு மற்றும் உருகிய நிலையிலான பாறைகள் ஓடை போல் வெளிவருகின்றன. கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிக பெரிய அளவில் இந்த எரிமலை வெடிப்பு ஏற்பட்டு உள்ளது.

இதனால் மீட்பு பணியாளர்கள் தங்களை பாதுகாத்து கொள்ளும் வகையில் மலை குன்றின் அடியில் சாம்பல் புகைக்கிடையே புகலிடம் தேடி தஞ்சமடைந்து உள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com