

போர்ட்-ஓ-பிரின்ஸ்,
கரீபியன் தீவு நாடான ஹைதியில் கடந்த 2021-ம் ஆண்டு அதிபர் ஜோவெனல் மொய்ஸ் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து, அந்நாட்டில் அரசியல் நிலைத்தன்மையின்றி ஆயுத கும்பல்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.
ஆயுத கும்பல்களின் வன்முறை பல மடங்கு அதிகரித்துள்ளது. மேலும் தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸ் உள்ளிட்ட பல இடங்களை ஆயுத கும்பல்கள் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளன. அதேவேளை, ஆயுதக்குழுவினர் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில், தலைநகர் போர்ட்-ஓ-பிரின்சில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கெண்ட்ஸ்கப் நகரில் ஆயுதக்குழுவினர் இடையே நேற்று இரவு மோதல் ஏற்பட்டது. துப்பாக்கி சூடு, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் இரு தரப்பும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.
இரு ஆயுதக்குழுவினர் இடையே நடந்த இந்த மோதலில் 42 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். இந்த மோதல் குறித்து தகவலறிந்த பாதுகாப்புப்படையினர் அப்பகுதியில் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.