தொடரும் வன்முறை.. ராஜினாமா செய்ய முன்வந்த ஹைதி பிரதமர்

ஹைதியில் நிலவும் நெருக்கடியான நிலைமைக்கு தீர்வு காண்பது தொடர்பாக, கரீபியன் தலைவர்கள் மற்றும் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் உள்ளிட்ட அதிகாரிகள் விவாதித்தனர்.
தொடரும் வன்முறை.. ராஜினாமா செய்ய முன்வந்த ஹைதி பிரதமர்
Published on

கரீபிய நாடான ஹைதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஆயுதக் குழுவினரின் வன்முறை தாக்குதல்களால் பல ஆண்டுகளாக மக்கள் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். 2021-ல் ஜனாதிபதி ஜோவனல் மோயிஸ் படுகொலை செய்யப்பட்டபின் வன்முறை மேலும் அதிகரித்துள்ளது. ஜனாதிபதி பதவிக்கான தேர்தலை கடந்த மாதம் (பிப்ரவரி) 7-ம் தேதிக்குள் நடத்தப்பட்டிருக்கவேண்டும். ஆனால், அரசாங்கம் தேர்தலை நடத்த தவறியதால் சமூக பதற்றம் அதிகரித்துள்ளது.

பிரதமர் ஏரியல் ஹென்றி பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த மாத இறுதியில் இருந்து தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸில் உள்ள பொது இடங்கள் மீது ஆயுதக்குழுக்கள் தாக்குதல்களை நடத்துகின்றன. குறிப்பாக, காவல் நிலையங்கள், போலீஸ் அகாடமி மற்றும் சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட இடங்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்படுகிறது.

இந்நிலையில், தொடர் வன்முறை மற்றும் சர்வதேச அழுத்தங்களுக்கு பணிந்த பிரதமர் ஏரியல் ஹென்றி, நாட்டை வழிநடத்த இடைக்கால கவுன்சில் உருவாக்கப்பட்டவுடன் ராஜினாமா செய்ய உள்ளதாக இன்று அறிவித்துள்ளார். இதுதொடர்பாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.

ஹைதியில் நிலவும் நெருக்கடியான நிலைமைக்கு தீர்வு காண்பது தொடர்பாக, கரீபியன் தலைவர்கள் மற்றும் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் உள்ளிட்ட அதிகாரிகள் ஜமைக்காவில் சந்தித்து விவாதித்தனர். அப்போது அரசியல் மாற்றம் மற்றும் உள்ளூர் மக்களுக்கு உடனடியாக மனிதாபிமான உதவிகளை வழங்குவது குறித்து பேசப்பட்டது. இடைக்கால கவுன்சில் அமைக்கும் திட்ட வரைவுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த கூட்டம் நடந்த சில மணி நேரங்களுக்கு பிறகு பிரதமர் ஹென்றி ராஜினாமா அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com