வாடிகன் நூலகத்தில் பிறந்தநாளை கொண்டாடியது மகிழ்ச்சி - போப் லியோ நெகிழ்ச்சி

ஒரு லட்சம் தொகுப்பு ஆவணங்களையும் மற்றும் ஆயிரக்கணக்கான நாணயங்கள், பதக்கங்கள் மற்றும் வரைபடங்களையும் அது கொண்டுள்ளது.
போப் லியோ
Published on

ரோம்

போப் லியோ வாடிகன் நூலகத்தில் தன்னுடைய 71-வது பிறந்தநாளை கொண்டாடினார்.

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக இருப்பவர் போப் லியோ. அவர், தன்னுடைய 71-வது பிறந்த நாளை வாடிகன் நூலகத்தில் நேற்று கொண்டாடினார். அப்போது வாடிகன் ஊழியர்களுக்கு ஒரு முக்கிய பரிசை வழங்கினார். அதாவது கொரோனா பாதிப்பு காலத்தில் பணியாளர்களின் சம்பளத்தில் விதிக்கப்பட்டிருந்த குறைப்புகளை ரத்து செய்வதாக அவர் அறிவித்தார்.

நிதி நிலைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தவிர, வாடிகன் ரகசிய காப்பகம் மற்றும் நூலக ஆவணங்களை நகருக்கு வெளியே மாற்றும் முந்தைய திட்டத்தையும் போப் லியோ ரத்து செய்தார்.

வாடிகன் நூலகம்

நகருக்குள்ளேயே புதிய கட்டிடம் கட்டி ஆவணங்களை பாதுகாக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். வாடிகன் நூலகத்திற்கு முதன்முறையாக சென்று அதனை பார்வையிட்டார். அப்போது, அவர் என்னுடைய பிறந்த நாளை வாடிகன் நூலகத்தில் கொண்டாடுவது என்பது அதிர்ஷ்டம் வாய்ந்தது என்றே நினைக்கிறேன். ஏனென்றால், என்னுடைய தாய் நூலகத்தில் பணியாற்றியவர் என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

முறைப்படி, 15-ம் நூற்றாண்டில் துவங்கப்பட்ட இந்த வாடிகன் நூலகம் 20 லட்சம் புத்தகங்களை தன்னகத்தே உள்ளடக்கி உள்ளது. ஒரு லட்சம் தொகுப்பு ஆவணங்களையும் மற்றும் ஆயிரக்கணக்கான நாணயங்கள், பதக்கங்கள் மற்றும் வரைபடங்களையும் அது கொண்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com