கனடாவில் கனமழை; ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் அழுகும் நிலையில் பயிர்கள்

அறுவடை செய்வதற்கான காலம் இன்னும் உள்ளது என்ற நம்பிக்கையுடன் விவசாயிகள் உள்ளனர்.
கனடா
Published on

டொரண்டோ

கனடாவில் பெய்து வரும் கனமழையால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் உள்ள பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கோதுமை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முன்னணி வகிக்கும் நாடாக கனடா உள்ளது. அந்நாட்டில் கனோலா எனப்படும் கடுகு எண்ணெய்க்கான பயிர்கள் உற்பத்தி மற்றும் முதல்தர கோதுமை உள்ளிட்டவை அறுவடைக்கு தயாராகி உள்ளன.

நீரில் மூழ்கிய பயிர்கள்

இந்த நிலையில், பருவம் தவறி பெய்து வரும் கனமழையால் அறுவடைப்பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. வயல்களில் தண்ணீர் தேங்கி பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் அறுவடை செய்ய முடியாமல் திணறி வருகின்றனர்.

கடந்த ஆகஸ்டு மாதத்தில் இருந்தே இந்த வகை பயிர்கள் நீரில் மூழ்கி அவற்றை அறுவடை செய்ய முடியாத சூழல் காணப்படுகிறது. இதனால், ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் பயிரிடப்பட்டு உள்ள பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கனோலா மற்றும் கோதுமை பயிர்கள் வீணாகி, விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுத்த கூடும் என கூறப்படுகிறது.

விவசாயிகள் நம்பிக்கை

எனினும் பனி படர்ந்து, மண் உறைந்து போக கூடிய சூழல் நவம்பரிலேயே ஏற்படும். அதனால், அறுவடை செய்வதற்கான காலம் இன்னும் உள்ளது என்ற நம்பிக்கையுடன் விவசாயிகள் உள்ளனர்.

ஆனால், சில இடங்களில் கோதுமை உள்ளிட்ட பயிர்கள் மழை நீரால், நிறம் இழந்தும் மற்றும் நீரில் அடித்து செல்லப்பட்டும் உள்ளன. சில பயிர்களில் பூஞ்சை தொற்றும் பரவி இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com