ஊரான் வீடு பற்றி எரியும் போது தீயணைக்க உதவுவது தியாகம் அல்ல: கமல்ஹாசன்

அடுத்த முறை ஆரஞ்சுப் பிழம்பு பார்க்கத் துடிப்பவர்களுக்கு தீபாவளியே போதுமானது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
ஊரான் வீடு பற்றி எரியும் போது தீயணைக்க உதவுவது தியாகம் அல்ல:  கமல்ஹாசன்
Published on

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் மாநிலங்களவை எம்.பியுமான கமல்ஹாசன் கூறியிருப்பதாவது -

எண்ணெய்க் கிடங்குகள் வெடித்து ஆரஞ்சு அக்னி மேகமாய்க் கொப்பளிக்கும் Youtube வீடியோ பார்த்து "அடேங்கப்பா! போட்டாம் பாரு" என்று, யாரோ கிரிக்கெட்டில் சிக்ஸர் அடித்தது போல் ஆர்ப்பரிப்பவரிடம், நீங்கள் எந்தக் கட்சி அமெரிக்காவா, ஈரானா? என்ற கேள்விக்கு, "நான் இந்தியன், நான் பார்வையாளன்” என விம்முகிறார்.இந்தியா தீவல்ல ஆசியத் துணைக்கண்டம் என்று புரியவைக்கும் என் வாக்கியம் முடியும் முன், "நான் ஹிந்து. இது ஹிந்துஸ்தான். இந்தப் பெயரை ஒத்துக்கொண்டு சூட்டியது இஸ்லாமிய முகலாய மன்னர்" என்று அவர் நண்பர் இடைமறிக்கிறார்.

முகலாய முஸ்லீமை, மன்னர்களை, 500 ஆண்டுகள் ஏற்றுக்கொண்ட பெரும்பான்மையைச் சேர்ந்த இவர்கள் நிச்சயமாக சத்ரபதி சிவாஜியின் நேரடி வாரிசுகளல்லர்; நாளை இந்திய எண்ணெய்க் கிடங்கிற்கு வரப்போகும் ஆபத்து புரியாதவர்கள். அவர் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் மதம், என்னை வியப்பில் ஆழ்த்தவில்லை. அவர் அறியாமையை வியப்பதோடு, அது என்னைப் பதற்றத்திற்கும் உள்ளாக்குகிறது. நடந்துகொண்டிருக்கும் இந்தப் போர், நாளை வலுத்துவிட்டால் இவர்கள் தன் மிடில் கிளாஸ் பங்கரில் ஒளிந்துகொண்டு (WI-FI வேலை செய்யும் வரை), 'ஆட்சியாளர் என்ன செய்கிறார்? என் ராணுவம் என்ன செய்கிறது?' என ட்வீட்டிவிட்டு, ஏதாவது லாரி டயர் வெடித்தால்கூட பயந்து பதுங்கப் போய்விடுவார்கள்.

நம் ராணுவ வீரர்கள் பலர் வீண் போரில் மடிந்த பின் 'சாரே ஜஹான்ஸே' பாட, மலர் வளையத்துடன் மனித நேயர்கள் என்ற விலாசத்துடன் தலைகாட்டுவார்கள். பாமரர்களும் பாதசாரிகளும் உழைப்பவர் வர்க்கமும், பெரும் கார்ப்பரேட் வியாபாரிகள் போல் எவன் எக்கேடு கெட்டால் என்ன என்று லாப நாமாவளி பாடிவிடக் கூடாது. ஊரான் வீடு பற்றி எரியும் போது தீயணைக்க உதவுவது தியாகம் அல்ல, மனித நேயம். அதையும் தாண்டி, வாழும் வீதியோ ஊரோ பற்றியெரியக் கூடாது என்ற அடிப்படைத் தற்காப்பு. அரபு எண்ணெய்க் கிடங்குகளின் வாயு நம் அடுப்புக்கும் வாகனங்களுக்கும் உதவுகிறது.

கிலாஃபத் இயக்கம் என்று பேசிய போது காந்தியாரைக் கிண்டலடித்தவர்களின் பேரப் பிள்ளைகள் இன்னமும் உயிரோடுதான் இருக்கிறார்கள். அவர்கள் நீடூழி வாழட்டும். கூடவே ஈரானும் ஊரானும் வாழட்டும். அடுத்த முறை ஆரஞ்சுப் பிழம்பு பார்க்கத் துடிப்பவர்களுக்கு தீபாவளியே போதுமானது. அதையும் தாண்டி அடுத்த மாத நெல் விதைப்புக்கான உரம் பற்றியும், அதற்கு அடுத்த வருடம் பற்றியும் சிந்திக்க வேண்டும். உலகுக்குத் தேவையான 70 விழுக்காடு உரம், ஃபாஸ்ஃபேட் எல்லாம் சீனாவிலும் சில வளைகுடா நாடுகளிலும் முடங்கிக் கிடக்கின்றன. பெட்ரோலியம், உரமோ பாசனமோ செய்ய பெரிதாக உதவாது. நம் உழவருக்கு மட்டுமல்ல அமெரிக்க உழவனுக்கும்தான்.

ஊடகத்தில் கிண்டல் மட்டும் அடிக்கும் அறியாமை, போருக்கோ நாட்டிற்கோ உதவாது.

'போர் செல்லும் வீரன் ஒரு தாய் மகன்தான்.

நம்மில் யார் இறந்தாலும் ஒரு தாய் அழுவாள்.'

(விஸ்வரூபம் படத்தில் நான் எழுதிய பாடல்)

அது இந்தியத் தாயாக இருக்கவே கூடாது..

நான் ஆசியாவின் பக்கம்.

வாழ்க இந்தியா” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com