இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவரின் மருமகன் பலி

லெபனானில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஆதரவு தெரிவித்து உள்ளார்.

இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவரின் மருமகன் பலி
Published on

டெல் அவிவ்

லெபனானின் பெய்ரூட் நகரில் நேற்றிரவு இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில், ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நயீம் காசிமின் தனி செயலாளர் மற்றும் மருமகனான அலி யூசுப் ஹர்ஷி என்பவர் பலியாகி உள்ளார்.

ஹிஸ்புல்லா தலைவர் அலுவலகத்தின் நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் முக்கிய பங்காற்றியவர். அவர், காசிமின் நெருங்கிய உதவியாளர் மற்றும் தனி ஆலோசகராகவும் செயல்பட்டு வந்திருக்கிறார். பெய்ரூட் மற்றும் அதனை சுற்றியுள்ள ஹிஸ்புல்லா உள்கட்டமைப்பை இலக்காக கொண்டு தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு உள்ளன.

தெற்கு லெபனானில் உள்ள ஆயுத கிடங்கு பகுதிகள், ஏவுதளங்கள் மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் என ஹிஸ்புல்லா தொடர்புடைய 10 இடங்களை இஸ்ரேல் ராணுவம் தாக்கியது. தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி வான்வழியே கடுமையாக தாக்குதல் நடத்திய பின்னர் மேற்காசியாவில் பதற்ற நிலை அதிகரித்தது. இந்த சூழலில், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே 2 வார காலத்திற்கு போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு உள்ளது.

டிரம்ப் அரசின் முடிவை இஸ்ரேல் அரசு வரவேற்றுள்ளது. ஆனால், இந்த 2 வார கால போர்நிறுத்த ஒப்பந்தத்தில், லெபனான் நாடு இடம் பெறாது என்றும் கூறி உள்ளது.

இதனால், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிரான தாக்குதல் நிறுத்தப்படாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று, லெபனானில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஆதரவு தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com