

லண்டன்,
இங்கிலாந்து நாட்டின் ‘லண்டன் கோபுரம்’ என்பது அந்நாட்டின் தலைநகரான லண்டனில் உள்ள தேம்ஸ் நதிக்கரையின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டை மற்றும் அரச அரண்மனை ஆகும். இது உலக அளவில் புகழ்பெற்ற ஒரு வரலாற்று நினைவுச் சின்னமாகும்.
இந்த கோபுரமானது வில்லியம் தி கான்குவரர் என்பவரால் நிறுவப்பட்டது. இந்த வளாகத்தின் மையப்பகுதியான ஆங்கிலேயர் அரச அதிகாரத்தின் அடையாளமாக விளங்கியது. அரச அரண்மனையாக ஆரம்பக் காலத்தில் இது செயல்பட்டது. அதுமட்டுமல்லாமல், இக்கோட்டையானது யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
லண்டன் கோபுரமானது அந்நாட்டின் சுற்றுலாத் தலங்களில் முதன்மையாக விளங்குகிறது. இந்தநிலையில், அந்த கோபுரத்தில், கிட்டத்தட்ட 1,000 ஆண்டுகள் பழமையான வரலாற்றில் முதன்முறையாக 25,000-க்கும் மேற்பட்ட வரலாற்று வரைபடங்கள் மற்றும் ஓவியப் பிரதிகள் பொதுமக்கள் பார்வையிடுவதற்காக அனுமதிக்கப்படவுள்ளன.
இக்கோட்டையை நிர்வகிக்கும் ஹிஸ்டாரிக் ராயல் பேலசஸ், சுமார் ரூ.700 கோடி அளவில் மறுசீரமைப்பு திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இதற்கு 'டுமாரோஸ் டவர்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த ஆவணங்கள் பொதுமக்கள் பார்வையிடுவதற்கு திறக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.