

ஆஸ்திரியா,
ஆஸ்திரியாவில் பிரவுனாவ் அன் இன் என்ற சிறிய நகரத்தில் 1889-ம் ஆண்டு பிறந்தவர் ஹிட்லர். ஜெர்மனி எல்லையருகே அமைந்த இந்த ஊரில் பிறந்த அவர், தந்தையின் பணியிட மாறுதல் காரணமாக அங்கிருந்து ஜெர்மனிக்கு குடிபுகுந்தார். பின்னர் அங்கு நாஜி கட்சியின் தலைவரானார்.
1938-ம் ஆண்டு உலகின் சர்வாதிகாரியாக உருவெடுத்த அவர் தான் பிறந்த ஆஸ்திரியாவுக்கு மீண்டும் வந்து அதனை ஜெர்மனியுடன் இணைந்து கொண்டார். மேலும் அங்கிருந்த 65 ஆயிரம் ஆஸ்திரியர்களை கொடூரமாக கொலை செய்ததும் இல்லாமல் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானவர்களை நாடு கடத்தினார். அதன்நீட்சியாக 2-ம் உலகப்போர் உருவாகி இறுதியில் நேச நாடுகளின் கூட்டுப்படையால் வீழ்ந்தார்.
2-ம் உலகப்போரின் 80-வது நினைவுத்தினம் அனுசரிக்கப்பட்டுள்ள நிலையில் சர்வாதிகாரி ஹிட்லர் மற்றும் அவருடைய நாஜிப்படைகள் செய்த கொடூரங்களில் இருந்து பாதிக்கப்பட்ட நாடுகள் மீண்டு வருகின்றன. மேலும் நாஜிப்படைகளால் பயன்படுத்தப்பட்ட கட்டிடங்கள் மற்றும் பிற பொருட்கள், நினைவு சின்னங்களாக மாறிவிடக்கூடாது என்ற நோக்கில் உலகநாடுகளின் அரசாங்கங்கள் கவனமாக செயல்பட்டு வருகின்றன.
அந்தவகையில் ஆஸ்திரியாவின் பிரவுனாவ் ஆம் இன் நகர மையத்தில், கடைகள் நிரம்பிய குறுகிய தெருவில் அமைந்துள்ள ஹிட்லர் பிறந்த வீட்டை எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும் என்ற விவாதம் தொடர்ந்து நிலவி வந்தது. ஒரு கட்டத்தில் இது பள்ளி, நூலகம் மற்றும் தற்காலிக அருங்காட்சியகமாக பயன்படுத்தப்படுத்த வேண்டும் கூறப்பட்டது.
2016-ம் ஆண்டு, இந்த பழுதடைந்த கட்டிடம் நாஜி ஆதரவாளர்களின் சின்னமாக மாறாமல் தடுக்க, ஆஸ்திரிய அரசு அதை தனது கட்டுப்பாட் டுக்குள் கொண்டு வந்து போலீஸ் நிலையமாக மாற்றப்படும் என அறிவித்தது. கொரோனா பாதிப்பு காரணமாக இந்த திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் தற்போது ஹிட்லர் பிறந்த வீட்டை போலீஸ்நிலையமாக மாற்ற ஆஸ்திரியா அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. ரூ.216 கோடி (24 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) செலவில் இந்தாண்டு இறுதிக்குள் இதனை செயல்பாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு ஆஸ்திரியாவில் ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.