ஹாங்காங் தீ விபத்து; பலி எண்ணிக்கை 156 ஆக உயர்வு

பராமரிப்பு பணிகளின்போது தரமற்ற பிளாஸ்டிக் மற்றும் ரசாயனம் பயன்படுத்தப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஹாங்காங்,
ஹாங்காங் நாட்டின் தாய் பொ நகரில் வாங் பெக் கோர்ட்டு காம்பிளஸ் பகுதியில் 35 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடியில் ஆயிரத்து 984 வீடுகள் உள்ளன. இதில் சுமார் 5 ஆயிரம் பேர் வசித்து வந்தனர். மேலும், அந்த அடுக்குமாடி குடியிருப்பிற்கு அருகே மேலும் சில அடுக்குமாடி குடியிருப்புகளும் உள்ளன. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் கட்டுமான பணிகளும் நடைபெற்று வந்தன.
இதனிடையே, இந்த அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 27-ந்தேதி மாலை 3 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென அடுக்குமாடி குடிருப்பின் பல்வேறு தளங்களுக்கு வேகமாக பரவியது. மேலும், கடுமான பணிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த மர கட்டமைப்புகள் மூலமாக தீ மளமளவென அருகில் இருந்த அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் பரவியது.
இந்த தீ விபத்தில் ஏற்கனவே 151 பேர் உயிரிழந்த நிலையில், பலியானோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி, ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் பலி எண்ணிக்கை 156 ஆக உயர்ந்துள்ளது. இந்த தீ விபத்து தொடர்பாக 15 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 12 பேர் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். பராமரிப்பு பணிகளின்போது தரமற்ற பிளாஸ்டிக் மற்றும் ரசாயனம் பயன்படுத்தப்பட்டதால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.






