சவுதி மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்

ஈரான், சவுதி அரேபியா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது
சவுதி மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்
Published on

ரியாத்,

சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இன்று ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஏமன் உள்நாட்டுப்போர்

ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது.

ஏமன் தலைநகர் சனா உள்பட பல பகுதிகளை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இந்த உள்நாட்டுப்போரில் அரசுப்படையினருக்கு சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவு அளித்து வருகின்றன. ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆயுதம் உள்பட பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது.

ஈரான், சவுதி அரேபியா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் ஏமனில் இரு நாடுகளும் மறைமுக மோதலில் ஈடுபட்டு வருகின்றன.

அதேவேளை, அமெரிக்கா, ஈரான் மோதலை தொடர்ந்து ஏமனில் உள்நாட்டுப்போர் தீவிரமடைந்து வருகிறது. ஏமன் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த சில வாரங்களாக மோதல் தீவிரமடைந்து வருகிறது.

ஏமன் அரசுப்படையினர் கட்டுப்பாட்டில் இருந்த பல பகுதிகளை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி வருகின்றனர். மேலும், சவுதி அரேபியா மீதும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

சவுதி மீது ஹவுதி தாக்குதல்

இந்நிலையில், சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இன்று ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளனர். சவுதி தலைநகர் ரியாத், பிஷா, தைப், பராசன், யன்பு ஆகிய நகரங்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். பொதுமக்கள் குடியிருப்புகள், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், கச்சா எண்ணெய் சேமிப்பு கிடங்குகள், உள்கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதல்களை சவுதி வான்பாதுகாப்பு அமைப்பு முறியடித்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, இந்த தாக்குதலுக்கு வலிமையான பதிலடி கொடுக்கப்படும் என சவுதி அரேபியா எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com