

புடாபெஸ்ட்,
நேட்டோவில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 13வது நாளாக இன்று நீடித்து வருகிறது. இதில், இரு நாடுகளை சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்து உள்ளனர். போரை முன்னிட்டு பல்வேறு நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கானோர் உக்ரைனில் இருந்து வெளியேறி வருகின்றனர்.
உக்ரைனில் நடந்த போரில் இருந்து உயிர்பிழைத்த 400க்கும் மேற்பட்ட நைஜீரிய குடிமக்கள் அந்த நாட்டு அரசாங்கத்தினால் விமானம் மூலமாக வார இறுதியில் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டதாக புலம்பெயர்ந்துள்ள நைஜீரியன்ஸ் இன் டயஸ்போரா கமிஷன் தெரிவித்துள்ளது.
இதே போல், இந்தியாவின் ஆபரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் கடந்த 24 மணி நேரத்தில் 7 விமானங்கள் மூலம் மொத்தம் 1,250 பேர் உட்பட 17,100 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உக்ரைனில் இருந்து நாடு திரும்பியுள்ளனர். ஜனவரி 2022 இல் அறிவிப்பு வெளியிடப்பட்டதில் இருந்து கிட்டத்தட்ட 22,000 இந்தியர்கள் உக்ரைனில் இருந்து இந்தியாவிற்கு திரும்பி சென்றுள்ளனர்.
இந்நிலையில், ஹங்கேரியின் புவிசார் அரசியல் மையத்தின் தலைவரான டாக்டர் அட்டிலா டெம்கோ, "உக்ரைன் ரஷியப் போரில் (இந்தியா, நைஜீரியா, பிற ஆப்பிரிக்க நாடுகள்) தப்பித்த வெளிநாட்டு மாணவர்களுக்கு ஹங்கேரி பல்கலைக்கழகங்களில் படிப்பைத் தொடர அரசு வாய்ப்பளிக்கிறது" என்று டுவீட் செய்துள்ளார்.