மகாராணி எலிசபெத் மறைவு எவ்வளவு பெரிய இழப்பு என்பதை அறிவேன் - இங்கிலாந்து புதிய ராஜா 3-ம் சார்லஸ் உரை

புதிய ராஜாவாக பதவியேற்கவுள்ள மூன்றாம் சார்லஸ் நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.
மகாராணி எலிசபெத் மறைவு எவ்வளவு பெரிய இழப்பு என்பதை அறிவேன் - இங்கிலாந்து புதிய ராஜா 3-ம் சார்லஸ் உரை
Published on

லண்டன்,

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் தனது 96-வது வயதில் நேற்று உயிரிழந்தார். ஸ்காட்லாந்தில் உள்ள பால்மொரல் பண்ணை வீட்டில் ராணி இரண்டாம் எலிசபெத் உயிரிழந்ததாக பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது. ராணி இரண்டாம் எலிசபெத் உயிரிழந்ததையடுத்து இங்கிலாந்தின் புதிய ராஜாவாக இளவரசர் 3-ம் சார்லஸ் அரியணை ஏறியுள்ளார்.

சார்லஸ் பிலிப் அர்துர் ஜார்ஜ் என்ற இயற்பெயர் கொண்ட 3-ம் சார்லஸ் உயிரிழந்த இரண்டாம் எலிசபெத்தின் மூத்த மகன் ஆவார். 73 வயதான சார்லஸ் இங்கிலாந்தின் புதிய ராஜாவாக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் அரியணை ஏறும் விழா விரைவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், புதிய ராஜாவாக பதவியேற்கவுள்ள 3-ம் சார்லஸ் நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவு உலகிற்கு எவ்வளவு பெரிய இழப்பு என்பதை நான் அறிவேன். மகாராணி எலிசபெத்தை இழந்து தவிக்கும் மக்களின் துக்கத்தில் நானும் பங்கேற்கிறேன். மறைந்த மகாராணி இரண்டாம் எலிசபெத் மக்களுக்கு சேவை செய்ய தனது வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணித்தவர்.

நாட்டு மக்களுக்கு மதம் கடந்து சேவையாற்ற கடமைப்பட்டுள்ளேன். அன்பு, விசுவாசம், மரியாதையோடு என் வாழ்நாள் முழுதும் மக்களுக்காக சேவை ஆற்றுவேன்.

அரசியல் சார்ந்த கோட்பாடுகளின் வழிதொடர்ந்து நடப்பேன். நான் விரும்பி செய்யும் சமூக சேவை பணிகளில் என்னால் அதிக நேரம் செலவிட முடியாத நிலை உள்ளது. இங்கிலாந்து இளவரசராக வில்லியம் செயல்படுவார்.

இவ்வாறு கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com