இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸின் முக்கிய தளபதி கொலை

காசாவின் தெற்குப் பகுதியில் இஸ்ரேல் விமானப்படையின் போர் விமானங்கள் திடீரென வான்வழித் தாக்குதலை நடத்தின.
இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸின் முக்கிய தளபதி கொலை
Published on

பெய்ரூட்,

இஸ்ரேலுக்குள் புகுந்து கொடூரத் தாக்குதல் நடத்திய ஹமாஸின் முக்கிய தளபதி இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

கொடூரமான தாக்குதல்

மத்திய கிழக்கு நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா பகுதிக்கு இடையே நீண்ட நாட்களாக போர் பதற்றம் நிலவி வருகிறது. கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி, ஒட்டு மொத்த உலகையே உலுக்கிய ஒரு பயங்கர சம்பவத்தை காசாவின் ஹமாஸ் அமைப்பினர் அரங்கேற்றினர்.

இஸ்ரேல் எல்லைக்குள் அத்துமீறிப் புகுந்த அவர்கள், அங்குள்ள சுக்பா ராணுவ முகாம் மீது கொடூரமான தாக்குதலைத் தொடுத்து, நூற்றுக்கணக்கான பொதுமக்களைக் கொன்று குவித்ததுடன், ஏராளமானோரைப் பிணைக் கைதிகளாகவும் கடத்திச் சென்றனர். இந்த கொடூரத் தாக்குதலுக்குக் காரணமான ஒவ்வொருவரையும் வேட்டையாடுவோம் என இஸ்ரேல் ராணுவம் சபதம் ஏற்றிருந்தது.

பயங்கரவாத பயிற்சி

இந்தச் சூழலில், காசாவின் தெற்குப் பகுதியில் உள்ள கான்யூனிஸ் நகரில் இஸ்ரேல் விமானப் படையின் போர் விமானங்கள் திடீரென அனல் பறக்கும் வான்வழித் தாக்குதலை நடத்தின. ஹமாஸின் முக்கிய நிலைகளைக் குறி வைத்து நடத்தப்பட்ட இந்தத் துல்லியமான தாக்குதலில், அக்டோபர் 7-ல் நடந்த தாக்குதலை முன்னின்று தலைமை தாங்கிய ஹமாஸின் 'நுக்பா' சிறப்புப் படைப்பிரிவு தளபதி முகமது மஹ்மூத் மர்ஷாத் அல்-காடி கொல்லப்பட்டார்.

பிணைக் கைதிகளை ரக்பா பகுதியில் சிறைபிடித்து வைத்திருந்த இவர், சமீப காலமாக இஸ்ரேலுக்கு எதிராகப் புதிய பயங்கரவாதப் பயிற்சிகளையும் அளித்து வந்ததாகக் கூறப்படுகிறது. போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிச் செயல்பட்டதால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பீதியில் ஹமாஸ் தளபதிகள்

இதற்கிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பு இஸ்ரேலின் சின்பெட் சிறப்புப் படையினரால் ஹமாஸின் உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவு தலைவர் முயின் அல்-அரபித் உயிரோடு கைது செய்யப்பட்டார். இஸ்ரேலிய உளவுத்துறையின் பிடியில் இருக்கும் அவர், ஹமாஸ் அமைப்பின் ஆயுதக் கிடங்குகள், பதுங்கு குழிகள் மற்றும் ரகசியத் திட்டங்கள் குறித்த அதிர வைக்கும் பல உண்மைகளைத் தொடர்ந்து கூறி வருவதாக சொல்லப்படுகிறது.

இதனால் இஸ்ரேல் ராணுவம் அடுத்த தாக்குதலை வான்வழியாக நடத்துமா அல்லது தரைவழியாக நடத்துமா என்ற பீதியில் ஹமாஸ் தளபதிகள் தற்போது உறைந்து போயுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com