சட்டவிரோத குடியேறிகள் விவகாரம்: பிரித்து வைக்கப்பட்ட 1,800 குழந்தைகள் பெற்றோரிடம் சேர்ப்பு

சட்டவிரோத குடியேறிகள் விவகாரத்தில் பிரித்து வைக்கப்பட்ட 1,800 குழந்தைகள் பெற்றோரிடம் சேர்க்கப்பட்டதாக டிரம்ப் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
சட்டவிரோத குடியேறிகள் விவகாரம்: பிரித்து வைக்கப்பட்ட 1,800 குழந்தைகள் பெற்றோரிடம் சேர்ப்பு
Published on

வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தான் பதவி ஏற்ற நாள் முதல் அகதிகள் பிரச்சினையை கடுமையாக கையாண்டு வருகிறார்.

அமெரிக்காவினுள் உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக நுழைகிறவர்கள் கைது செய்யப்பட்டு, கிரிமினல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். அவர்கள் குழந்தைகளுடன் வந்திருந்தால், அந்தக் குழந்தைகளை பெற்றோரிடம் இருந்து பிரித்தெடுத்து, அவர்களுக்கான தனி காவல் மையத்தில் அடைக்கிற கொள்கையை ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் அமல்படுத்தியது.

இந்த கொள்கை காரணமாக கடந்த மே மாதம் முதல் ஜூன் மாதம் வரை 2,500க்கும் மேற்பட்ட குழந்தைகள் அவர்களின் பெற்றோரிடம் இருந்து பிரித்தெடுக்கப்பட்டு தனி காவல் மையங்களில் அடைக்கப்பட்டனர்.

டிரம்பின் இந்த கொள்கைக்கு அவருடைய மனைவி மெலனியா டிரம்ப், மகள் இவான்கா டிரம்ப் ஆகியோரிடம் இருந்து கூட எதிர்ப்பு கிளம்பவே, அவர் அதனை திரும்ப பெற்று உத்தரவு பிறப்பித்தார். எனினும் ஏற்கனவே பிரிக்கப்பட்ட குழந்தைகளை அவர்களின் பெற்றோருடன் சேர்ப்பது குறித்து, அந்த உத்தரவில் அவர் ஏதும் குறிப்பிடவில்லை.

இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த சான்டியாகோ கோர்ட்டு நீதிபதி டானா சாப்ராவ், பெற்றோரிடம் இருந்து பிரித்து வைக்கப்பட்ட குழந்தைகளை அவர்களின் பெற்றோரோடு மீண்டும் சேர்த்து வைக்கவேண்டும் எனக்கூறி கடந்த மாதம் தீர்ப்பு வழங்கினார்.

நீதிபதி விதித்த காலக்கெடு நேற்று முன்தினம் முடிந்ததையடுத்து, பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்பட்ட 1,820 குழந்தைகளை நேற்று அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டதாக டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதே சமயம் 700க்கும் மேற்பட்ட குழந்தைகள் இன்னமும் தனிகாவல் மையங்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 431 குழந்தைகளின் பெற்றோர் தற்போது அமெரிக்காவிலேயே இல்லை என்பது கவலைக்குரிய விஷயமாகும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com