

வாஷிங்டன்,
சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எப்) உக்ரைனுக்கு 1.4 பில்லியன் டாலர் நிதியுதவி வழங்க முடிவு செய்தது. இதுகுறித்து விவாதிக்கும் நிர்வாக குழுவின் கூட்டம் நேற்று முன் தினம் நடைபெற்றது.
இதுகுறித்து கூறிய சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா கூறுகையில், 'உக்ரைன் மீதான ரஷிய போரினால் ஏற்பட்ட அதிர்ச்சியை சமாளிக்க, உக்ரைனுக்கு 1.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியுதவி வழங்கும் திட்டத்தின் ஒப்புதலுக்காக நிர்வாக குழுவிற்கு அனுப்பியுள்ளோம். உக்ரைன் மீதான விவாதத்தை 'சீர்திருத்தங்கள்' என்பதில் இருந்து 'நெருக்கடி மேலாண்மை' என மாற்றியுள்ளோம்' என்று கூறி இருந்தார்.
இந்நிலையில் ரஷிய படைகளின் படையெடுப்பில் சிக்கியுள்ள உக்ரைனுக்கு 140 கோடி டாலர் (ரூ.10 ஆயிரத்து 640 கோடி) நிதியுதவி வழங்க சர்வதேச நிதியத்தின் செயற்குழு ஒப்புதல் அளித்துள்ளது.
அவசர நிதி தேவைகளை பூர்த்தி செய்யவும், போரால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பை தணிக்கவும் இந்த நிதியுதவி அளிக்கப்படுவதாக சர்வதேச நிதியம் கூறியுள்ளது.