

இஸ்லாமாபாத்,
பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு கடந்த 25ந் தேதி தேர்தல் நடந்தது. உடனடியாக ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது.
இந்த தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்இஇன்சாப் (பி.டி.ஐ.) கட்சி 116 இடங்களை பிடித்து தனிப்பெரும் கட்சியாக வந்து உள்ளது.
முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சிக்கு (நவாஸ்) 64 இடங்கள் கிடைத்து உள்ளன. மற்றொரு முன்னாள் பிரதமரான பெனாசிர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 43 இடங்களுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
அந்தவகையில் இந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனினும் அதிக இடங்களை பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பி.டி.ஐ. சார்பில், அதன் தலைவர் இம்ரான்கான் பாகிஸ்தானின் அடுத்த பிரதமராகும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. கூட்டணி அமைத்தால் இம்ரான் கான் பிரதமர் ஆகும் நிலை உள்ளது. அதற்கான பேச்சுவார்த்தையும் நடந்துள்ளது.
பாகிஸ்தான் அரசியல் சாசனப்படி தேர்தல் நடந்து 21 நாட்களுக்குள் நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கூட்டி, புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்க வேண்டும், சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அதன்படி, ஆகஸ்டு 15ந்தேதிக்குள் அரசு அமைக்கப்பட வேண்டும்.
இந்த நிலையில் இதுபற்றி சட்ட மந்திரி பொறுப்பு வகிக்கும் அலி ஜாபர் கூறும்பொழுது, நாடாளுமன்ற புதிய கூட்ட தொடர் ஆகஸ்டு 11 அல்லது 12ந்தேதி கூடலாம். அதன்பின் பிரதமர் தேர்வானது ஆகஸ்டு 14ந்தேதி நடைபெற கூடும். அன்றைய தினமே ஜனாதிபதி மம்னூன் உசைன் புதிய பிரதமருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கலாம் என தெரிவித்து உள்ளார்.
பாகிஸ்தான் நாடு சுதந்திரம் பெற்ற ஆகஸ்டு 14ந்தேதி புதிய பிரதமர் பதவி பிரமாணம் ஏற்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். அதனால் புதிய அரசு தேசிய அளவில் முழு உற்சாகத்துடன் மற்றும் தேச வளர்ச்சிக்காக ஈடுபாட்டுடன் தனது செயல்களை தொடங்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.