

காபூல்,
அபின் என்று அழைக்கபடும் போதைப்பொருளை உலகிலேயே அதிக அளவு உற்பத்தி செய்யப்படும் நாடாக ஆப்கானிஸ்தான் உள்ளது. உலகின் மொத்த அபின் வினியோகத்தில் 5ல் 4 பங்கு ஆப்கானிஸ்தானில் உற்பத்தி செய்யப்படுவதாக ஐ.நா. கூறுகிறது. அதோடு அந்த நாட்டின் பொருளாதாரத்தில் அபின் வர்த்தகம் பெரும் பங்கு வகிப்பதாகவும் ஐ.நா. தெரிவிக்கிறது.
இந்த நிலையில் கடந்த மாதம் 15-ந்தேதி ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்த தலீபான்கள் நாட்டில் அபின் உற்பத்தி மற்றும் வர்த்தகம் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என அறிவித்தனர். ஆனால் ஆப்கானிஸ்தானில் தற்போது அபின் வர்த்தகம் தீவிரமாக நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தெற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள சந்தைகளில் அபின் சகஜமாக விற்கப்பட்டு வருகிறது.
தலீபான்கள் அபின் வர்த்தகத்துக்கு தடை விதிப்பதற்கு பதிலாக அவற்றின் மீது வரிவிதிப்பதன் மூலம் லாபம் ஈட்ட முடிவு செய்தால் அபின் வர்த்தகம் முன்பை விட அதிகரிக்கும் என பல நாடுகள் கவலை தெரிவித்த நிலையில், அபின் வர்த்தகம் குறித்து தற்போது வெளியாகியுள்ள செய்தி கவலையை அதிகரித்துள்ளது. இதனிடையே அபின் வர்த்தகத்தை தடை செய்யப்போவாக தலீபான்கள் அறிவித்த பிறகு, அபின் வியாபாரிகள் விலையை பல மடங்கு உயர்த்தியதாக கூறப்படுகிறது.