இந்தோனேஷியாவில் நிலநடுக்கத்திற்கு பலி எண்ணிக்கை 164 ஆக உயர்வு

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு பலி எண்ணிக்கை 164 ஆக உயர்ந்துள்ளது.
இந்தோனேஷியாவில் நிலநடுக்கத்திற்கு பலி எண்ணிக்கை 164 ஆக உயர்வு
Published on

மட்டாரம்,

இந்தோனேஷியாவின் லாம்போக் தீவில் கடந்த ஞாயிற்று கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 7.0 ஆக பதிவாகியது. 45 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு இது மையம் கொண்டிருந்தது. இதை தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட சிறு சிறு நில அதிர்வுகளும் ஏற்பட்டன.

இந்நிலநடுக்கம் சுற்றுலா தலம் ஆக விளங்கும் அருகிலுள்ள பாலி தீவிலும் உணரப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் தெருக்களில் சிதறி ஓடினர்.

இந்த நிலநடுக்கத்திற்கு 82 பேர் பலியாகி இருந்தனர். பின் நேற்று இது 131 ஆக உயர்ந்தது. இந்நிலையில், பலி எண்ணிக்கை 164 ஆக இன்று உயர்ந்துள்ளது. 1,400 பேர் தீவிர காயமடைந்து உள்ளனர்.

இது இரண்டாவது முறையாக லாம்போக் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஆகும். இதனால் மட்டாரம் நகரில் பல்வேறு பகுதிகளிலும் கட்டிடங்களும் சேதமடைந்து உள்ளன. மின்சாரம் தடைப்பட்டு உள்ளது.

அந்நாட்டு அதிகாரிகள், நிலநடுக்கத்தினை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுத்தனர். பின்னர் அது ரத்து செய்யப்பட்டது. ஆனால் கடலை ஒட்டி அருகில் இருந்த கிராமங்களுக்குள் கடல்நீர் உட்புகுந்துள்ளது.

இந்தோனேஷியாவின் லாம்போக் தீவில் கடந்த 29ந்தேதி கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.4 ஆக பதிவாகி இருந்தது. இதில் 17 பேர் பலியாகினர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில் இதே பகுதியில் மீண்டும் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

இந்நிலநடுக்கத்தினால் இடம் பெயர்ந்த 1.5 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு மருத்துவம், உணவு மற்றும் தூய்மையான குடிநீர் ஆகியவை உடனடியாக கிடைக்க செய்ய வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

அந்நாட்டில் கிராம பகுதிகளில் வசிக்கும் மக்கள் அச்சத்துடன் உள்ளனர். அவர்கள் சாலைகளில் அல்லது வறண்ட வயல்வெளிகளில் கூடாரங்களில் தங்கி உள்ளனர்.

உள்ளூர் அதிகாரிகள், சர்வதேச நிவாரண குழுக்கள் மற்றும் மத்திய அரசு ஆகியவை உதவிக்கான பணிகளை தொடங்கி உள்ளது. ஆனால் மலை பிரதேச பகுதியான வடலாம்போக் பகுதிக்கு செல்வதற்கான சாலைகள் சேதமடைந்த நிலையில் அதற்கான முயற்சிகளில் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலநடுக்கத்தில் உயிர் பிழைத்தவர்களில் வடக்கு மற்றும் மேற்கு லாம்போக் பகுதியை சேர்ந்த சிலருக்கு உதவிகள் இன்னும் போய் சேரவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com