

பெய்ரூட்,
கடந்த ஜூலை மாதம் சிரியா தலைநகர் டமாஸ்கசில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான் தாக்குதலில் ஹிஸ்புல்லா பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். இதையடுத்து இஸ்ரேல் ராணுவத்துக்கு தகுந்த பதிலடி கொடுப்போம் என ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு பகிரங்க மிரட்டல் விடுத்தது. இதனால் லெபனான் மற்றும் இஸ்ரேல் எல்லையில் பதற்றமான சூழல் நீடித்து வந்தது.
இந்த நிலையில் லெபனானில் இஸ்ரேல் நாட்டின் எல்லையில் இருந்து ஒரு 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அய்டா அஷ் ஷாப் என்ற கிராமத்தில் இஸ்ரேல் ராணுவத்தின் ஆளில்லா விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியது. இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ள இஸ்ரேல் ராணுவம் வழக்கமான ரோந்து பணியின்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து நேரிட்டு இருக்கலாம் என தெரிவித்துள்ளது.
அதே சமயம் தங்கள் நாட்டின் வான் பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த இஸ்ரேல் ராணுவத்தின் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது.
முன்னதாக கடந்த ஜூலை மாதமும் இதே போல் லெபனானில் இஸ்ரேல் ஆளில்லா விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியது. அப்போதும் அந்த விமானத்தை தாங்களே சுட்டு வீழ்த்தியதாக ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் தெரிவித்ததும், அதனை மறுத்த இஸ்ரேல் ராணுவம் தொழில்நுட்ப கோளாறால் விபத்து நேரிட்டதாக கூறியதும் குறிப்பிடத்தக்கது.