

* ஆப்கானிஸ்தானில் பத்கிஸ் மாகாணத்தில் உள்ள ராணுவ சோதனை சாவடி மீது தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் ராணுவ வீரர்கள் 6 பேர் உயிரிழந்தனர். பாக்லான் மாகாணத்தில் சாலையோர குண்டுவெடிப்பு சம்பவத்தில் சிவிலியன் ஒருவர் பலியானதாக மற்றொரு தகவல் கூறுகிறது.
* பாகிஸ்தானில் முஷரப் ஆட்சிக்காலத்தில் தேசிய நல்லிணக்க அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. அரசியல்வாதிகள், கிரிமினல்கள் ஊழல் மற்றும் பிற குற்ற வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அப்போது நாட்டுக்கு ஏற்பட்ட இழப்புகளை முஷரப்பிடம் இருந்து திரும்பப் பெற வேண்டும் என்று கோரி அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் முஷரப்புக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டு உள்ளது.
* வல்லரசு நாடுகளுடன் செய்துகொண்ட அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் பலனற்று போனால், யுரேனியம் செறிவூட்டும் நடவடிக்கையை அதிகரிக்குமாறு உத்தரவிட்டு உள்ளதாக ஈரான் தலைவர் அயத்துல்லா காமேனி கூறி உள்ளார். ஆனால் இது அபாய கட்டத்தை நெருங்கி விடும் நிலையில் உள்ளதாக பிரான்ஸ் வெளியுறவு மந்திரி லீ டிரையன் தெரிவித்து இருக்கிறார்.
* பேஸ்புக் சமூக வலைத்தளம், உபயோகிப்பாளர்களின் அந்தரங்க தகவல்களை 4 சீன நிறுவனங்களுடன் பகிர்ந்துகொள்வதற்கு ஒப்பந்தம் செய்து, அவ்வாறு பகிர்ந்து கொண்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
* கவுதமாலா எரிமலை வெடிப்பில் பொதுமக்கள் 200 பேர் மாயமாகி விட்டதாகவும், பலியானவர்களின் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்து உள்ளதாகவும் தெரியவந்து உள்ளது.