

ஜெனீவா,
ஆப்கானிஸ்தானில் அரசுக்கு எதிரான சக்திகளுக்கு நிதி உதவி அளிப்பதும் ஆயுதம், வெடிபொருட்கள் உள்ளிட்டவற்றை அளிப்பது யார் என்று ஐக்கிய நாடுகள் அவையில் இந்தியா கேள்வி எழுப்பியுள்ளது. ஐநாவுக்கான
இந்தியாவின் நிரந்தர தூதர் சையது அக்பரூதின் கூறியதாவது:- ஆப்கானிஸ்தானில் நடைபெறும் தாக்குதல்களும் வன்முறைகளும் அரசுக்கு எதிரான சக்திகள் அல்லது சிவில் மற்றும் அரசியல் முரண்பாடு என புறந்தள்ளப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் உள்ள அரசுக்கு எதிரான சக்திகள் என்பவர்கள் யார்? அவர்களுக்கு ஆயுதங்கள் பயிற்சி உள்ளிட்டவை எங்கிருந்து வருகிறது.
பயங்கரவாதத்தில் நல்லது, கெட்டது என வேறுபடுத்த கூடாது. அல்லது ஒரு அமைப்பிற்கு எதிராக மற்றொரு அமைப்பை தூண்டிவிடக்கூடாது. இதன் அடிப்படையில் தான் தலிபான், ஹக்கானி, அல் கொய்தா, லஷ்கர், ஜேஇஎம் போன்றவைகளை பயங்கரவாத அமைப்புகளாக கருதி, அவற்றை நியாயபடுத்தாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த இடத்திலும், எந்த நிலையிலும் பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பான இடங்கள் கிடைப்பதை தடுக்க வேண்டும். இதனை சர்வதேச சமுதாயம் உறுதி செய்ய வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.
ஆப்கானிஸ்தான் பிராந்தியங்களில் மிக மோசமான தாக்குதல்கள் அண்மைக்காலமாக நடைபெற்று வருகிறது. மருத்துவமனைகள், பள்ளிகள், பன்னாட்டு தூதரகங்கள் போன்றவைகள் மீது அடிக்கடி தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.