

புதுடெல்லி,
அரசியல் குழப்பம் நீடிக்கும் மாலத்தீவில் 15 நாட்களுக்கு அவசரகால நிலையை அதிபர் அப்துல்லா யாமீன் இன்று அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து இந்திய வெளிவிவகார அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.
அதில், மாலத்தீவில் நிலவும் அரசியல் சூழ்நிலை மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு சூழல் இந்தியாவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. அதனால் அடுத்த அறிவிப்பு வரும்வரை இந்திய குடிமக்கள் மாலத்தீவுக்கு மேற்கொள்ளும் தேவையற்ற பயணங்களை தவிர்க்கும்படி அறிவுறுத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அரசியல் கைதிகளை விடுவிக்கும்படி கூறிய சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை ஏற்க மறுத்த யாமீன் அவசரகால நிலை அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். இதனால் சந்தேகப்படுபவர்களை பிடித்து, கைது செய்வதற்கு பாதுகாப்பு படைகளுக்கு முழுமையாக அதிகாரம் வழங்கப்பட்டு விடும்.