

மாஸ்கோ,
ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்று வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்.சி.ஓ.) பாதுகாப்பு மந்திரிகளின் ஒருங்கிணைந்த கூட்டத்தில் பங்கேற்க மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் மூன்று நாள் பயணமாக சென்று உள்ளார்.
இதன் ஒரு பகுதியாக இந்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று மாலை மாஸ்கோவில் ரஷியாவின் பாதுகாப்பு மந்திரி ஜெனரல் செர்ஜி ஷோயுகுவை சந்தித்து பேசினார்.
இதனை தொடர்ந்து ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் பாதுகாப்பு மந்திரிகள் கலந்து கொண்ட ஒருங்கிணைந்த கூட்டத்தில் ராஜ்நாத் சிங் இன்று பேசினார். அவர் பேசும்பொழுது, பயங்கரவாதம், போதை பொருள் கடத்தல் மற்றும் தேச எல்லைகளை கடந்து, சர்வதேச சமூகத்தின் அடிப்படை கொள்கைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் உள்நாட்டு குற்றங்கள் உள்ளிட்ட பாரம்பரிய மற்றும் பாரம்பரியம் அல்லாத அனைத்து அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்வதற்கான திறன் நமக்கு தேவையாக உள்ளது.
நீங்கள் அனைவரும் அறிந்ததுபோல், அனைத்து வடிவிலான பயங்கரவாதம் மற்றும் அதன் அடையாளங்களுக்கு சந்தேகமேயின்றி இந்தியா கண்டனம் தெரிவிக்கின்றது. அதற்கு ஆதரவளிப்போருக்கும் கண்டனம் தெரிவிக்கிறது.
சர்வதேச சட்டங்களில் கூறப்பட்டதன்படி தெளிவான, வெளிப்படையான, விதிகளை அடிப்படையாக கொண்ட உலக பாதுகாப்பு கட்டமைப்புக்கான பணியில் இந்தியா ஈடுபட்டு உள்ளது என நான் மீண்டும் இன்று உறுதியளிக்கிறேன் என ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.