கானாவின் வளர்ச்சி பயணத்தில் சக பயணியாக இந்தியா உள்ளது: பிரதமர் மோடி

பிரதமர் மோடி கானாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். 30 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய பிரதமர் ஒருவர் கானா செல்வது இதுவே முதல் முறையாகும்.
கானாவின் வளர்ச்சி பயணத்தில் சக பயணியாக இந்தியா உள்ளது: பிரதமர் மோடி
Published on

அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி கானா நாட்டிற்கு சென்றுள்ளார். கடந்த 30 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் கானா செல்வது இதுவே முதல் முறையாகும். கானா சென்ற பிரதமர் மோடிக்கு அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரதமர் மோடியை கவுரவிக்கும் வகையில் 21 குண்டுகள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து கானா நாட்டின் அதிபர் மஹாமாவை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:

அதிபர் மஹாமாவுடனான பேச்சுவார்த்தைகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தன. எங்கள் உறவுகள் இருநாட்டு மக்களுக்கு பயனளிக்கும். வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவது குறித்து நாங்கள் விவாதித்தோம். நிதி தொழில்நுட்பம், திறன் மேம்பாடு, சுகாதாரம் மற்றும் பிற துறைகளில் உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினோம்" என்றார்.

பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம், முதலீடு உள்ளிட்டவை தொடர்பாக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி பேசுகையில் கூறியதாவது: - கானாவில் கிட்டத்தட்ட 2 பில்லியன் டாலர் அளவிலான முதலீடுகளை இந்திய நிறுவனங்கள் செய்துள்ளன. அடுத்த ஐந்து ஆண்டுகளில் எங்களின் பரஸ்பர வர்த்தகத்தை இரு மடங்காக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். கானாவின் வளர்ச்சி பாதையில் இந்தியா கூட்டாளியாக இல்லை. சக பயணியாக உள்ளது. யுபிஐ டிஜிட்டல் பேமெண்ட்கள் விவகாரத்தில் இந்தியா தனது அனுபவத்தை கானாவுடன் பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளது" இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com