

புதுடெல்லி
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ம் கட்ட அமர்வு நடந்து வருகிறது. இதில் பிரதமர் மோடி மக்களவையில் பேசி வருகிறார். மேற்காசிய மோதல் பற்றி குறிப்பிட்டு அவர் பேசும்போது, போரின் தொடக்கத்தில் இருந்து இந்த மோதல் தொடர்பாக நாம் ஆழ்ந்த கவலை தெரிவித்து வருகிறோம். மேற்காசியாவில் உள்ள தொடர்புடைய தலைவர்களிடம் தனிப்பட்ட முறையில் நான் பேசியிருக்கிறேன். பதற்றங்களை தணித்து, போரை முடிவுக்கு கொண்டு வாருங்கள் என ஒவ்வொருவரையும் வலியுறுத்தி வருகிறேன்.
பொதுமக்கள், எரிசக்தி மற்றும் போக்குவரத்து கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவிக்கிறது. வர்த்தக கப்பல்களை தாக்குவது, ஹார்மூஸ் ஜலசந்தி போன்ற சர்வதேச நீர்வழிகளை முடக்குவது என்பது ஏற்று கொள்ள முடியாதது என்று கூறினார்.
அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் தொடுத்தன. இதனால் ஈரானில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதனால் மேற்காசிய பகுதியில் கடும் பதற்ற நிலை காணப்படுகிறது. இதனை தொடர்ந்து ஈரான் நடத்தி வரும் பதிலடி தாக்குதல்களால் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் அவற்றின் படை தளங்கள் அமைந்த வளைகுடா நாடுகள் பாதிக்கப்பட்டு உள்ளன.
வான், கடல் வழி போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. பல்வேறு நாடுகளிலும் எரிபொருள் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட சிக்கல்கள் எழுந்துள்ளன. நாடுகளுக்கு இடையேயான மோதலால் மேற்காசிய பகுதியில் தொடர்ந்து பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது.