இந்தியா - அமெரிக்கா உறவு மிகவும் சிறப்பாக உள்ளது: டொனால்டு டிரம்ப்

இந்தியா - அமெரிக்கா உறவு மிகவும் சிறப்பாக உள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறினார்.
இந்தியா - அமெரிக்கா உறவு மிகவும் சிறப்பாக உள்ளது: டொனால்டு டிரம்ப்
Published on

வாஷிங்டன்,

பிரான்ஸ் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு 2 நாள் பயணமாக சென்றடைந்தார். அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர் மோடி, அந்நாட்டு ஜனாதிபதி டொனால்டு டிரம்பை இந்திய நேரப்படி இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் சந்தித்தார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதற்காக டிரம்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ஜனாதிபதி டிரம்பை சந்தித்த பிரதமர் மோடி பல்வேறு முக்கிய அம்சங்களை குறித்து விவாதித்தார்.

இந்த நிலையில், பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியதாவது:-

5 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிற்கு பயணம் செய்ததை மறக்கவே முடியாது. எப்போதும் இல்லாத வகையில் இப்போது இந்தியா - அமெரிக்கா உறவு மிகவும் சிறப்பாக உள்ளது. இந்திய பிரதமர் மோடி என்னைவிட சிறப்பாக பேச்சுவார்த்தை நடத்துபவராக இருக்கிறார்; அவ்விஷயத்தில் அவருடன் போட்டிப்போடுவதற்குகூட ஏதுமில்லை.

இந்தியாவிற்கு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை வழங்கும் நாடாக அமெரிக்கா இருக்கும். இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா பொருளாதார வழித்தடம் உருவாக்க இணைந்து பணியாற்றுவோம். டாலருக்கு எதிராக போட்டி கரன்சியை உருவாக்கும் நாடுகள் மீது கூடுதல் வரி விதிக்கப்படும்.

இந்தியாவுக்கான ராணுவ தளவாட விற்பனையை பல பில்லியன் டாலர்கள் அதிகரிக்க உள்ளோம். ரஷியா-உக்ரைன் போர் உட்பட உலகில் நடைபெறும் அனைத்து போர்களும் முடிவுக்கு வர வேண்டும்; உக்ரைன்-ரஷ்யா போரை நிறுத்த உதவும் பேச்சுவார்த்தைகளுக்கு இந்தியா -அமெரிக்கா என இரு நாடுகளும் உதவுவோம்.

யுத்தங்களில் செலவிடப்படுகிற பல ஆயிரக்கணக்கான பில்லியன் டாலர்கள் ஆக்கபூர்வமான பணிகளுக்கு பயன்படுத்தபட வேண்டும். வர்த்தகம் மற்றும் முதலீடுகளை ஊக்குவிக்க இந்தியா, அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com