ஆஸ்திரேலியாவில் இரவுநேர பயிற்சி: இந்திய விமானப்படை பங்கேற்கிறது

வரலாற்று சிறப்புமிக்க கூட்டுப்பயிற்சி, அடுத்த மாதம் ஆகஸ்ட் 7-ந்தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது.
இந்திய விமானப்படை
Published on

டார்வின்,

ஆஸ்திரேலியாவின் டார்வின் நகரில் உள்ள ராயல் ஆஸ்திரேலிய விமானப்படை தளத்தில், நாளை பிரம்மாண்ட பன்னாட்டு வான்வழி போர் பயிற்சி தொடங்குகிறது. இதில் பங்கேற்பதற்காக இந்திய விமானப்படையின் அதிநவீன போர் விமானங்கள் மற்றும் வீரர்கள் ஆஸ்திரேலியா விரைந்துள்ளனர்.

பயிற்சிகள்

இந்திய விமானப்படை இதற்கு முன்னர் 2018, 2022 மற்றும் 2024-ம் ஆண்டுகளில் நடைபெற்ற பயிற்சிகளில் பங்கேற்று, பாதுகாப்பு ஒத்துழைப்பிலும் பிராந்திய பாதுகாப்பை வலுப்படுத்துவதிலும் தனது உறுதிப்பாட்டை வலியுறுத்தியுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த வரலாற்று சிறப்புமிக்க கூட்டுப்பயிற்சி, அடுத்த மாதம் ஆகஸ்ட் 7-ந்தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது.

இந்திய விமானப்படை  விமான வீரர்கள்

பிட்ச் பிளாக்

வழக்கமான பகல்நேர பயிற்சிகளை தாண்டி, இந்த முறை நள்ளிரவிலும் எதிரி நாட்டு விமானங்களை இடைமறித்து தாக்கும் ‘இரவுநேரப் போர் பயிற்சிக்கு’ கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த பயிற்சிக்கு பிட்ச் பிளாக் என்ற பெயர் வந்தது. இருட்டிலும் இலக்குகளை துல்லியமாக தாக்கும் வியூகங்களை இந்திய விமானப்படை இதில் சோதிக்கிறது.

ரபேல் போர் விமானம்

இந்திய விமானப்படை பிரிவில் விமானிகள், பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், கட்டுப்பாட்டாளர்கள், துறைசார் நிபுணர்கள் உள்ளிட்ட உயர் திறன்கொண்ட விமான வீரர்கள் உள்ளனர். இந்தக் குழு, வானிலிருந்து எரிபொருள் நிரப்பும் சி-17 குளோப்மாஸ்டர்- 3 மற்றும் ஐஎல்-78 விமானங்களின் ஆதரவுடன் போர் சார்ந்த பணிகளில் ரபேல் அதி நவீன போர் விமானத்தை இயக்கும்.

போர் விமானம்

பன்னாட்டு பலப்பரீட்சை

உலக நாடுகளுக்கு இடையே வான்வழி பாதுகாப்பு மற்றும் நட்புறவை பலப்படுத்தும் நோக்கில் இந்த கூட்டு பயிற்சி நடக்கிறது. இதில் இந்திய மற்றும் ஆஸ்திரேலியா தவிர, உலகின் முன்னணி நாடுகளை சேர்ந்த போர் விமானங்களும் பங்கேற்று தங்கள் வான்வழி பலத்தை நிரூபிக்க உள்ளன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com