ஹமாசுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய இந்திய வம்சாவளி பெண் அதிகாரி பணிநீக்கம்; மைக்ரோசாப்ட் அதிரடி

இந்திய வம்சாவளியை சேர்ந்த வனியா அகர்வால் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
ஹமாசுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய இந்திய வம்சாவளி பெண் அதிகாரி பணிநீக்கம்; மைக்ரோசாப்ட் அதிரடி
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பிரபல மென்பொருள் நிறுவனம் மைக்ரோசாப்ட். இந்நிறுவனத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த வனியா அகர்வால் பணியாற்றி வந்தார். அமெரிக்காவில் உள்ள அலுவலகத்தில் அவர் பணியாற்றி வந்தார்.

இதனிடையே, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் 50ம் ஆண்டு தினம் கடந்த 4ம் தேதி கொண்டாடப்பட்டது. அமெரிக்காவில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரிகளான சத்ய நாதல்லா, பில் கேட்ஸ், ஸ்டீவ் பால்மர், முஸ்தபா சுலைமான் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது திடீரென குறுக்கிட்ட வனியா அகர்வால், மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு எதிராகவும், ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கு ஆதரவாகவும் குரல் எழுப்பினார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி காசாவில் இஸ்ரேல் படையினர் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களை கொன்றுவிட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். இதையடுத்து அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில், வனியா அகர்வாலை பணியில் இருந்து நீக்கி மைக்ரோசாப்ட் நிறுவனம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அதேவேளை, தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டதாக வனியா அகர்வால் தெரிவித்துள்ளார். வனியாவுடன் சேர்ந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு எதிராகவும், ஹமாசுக்கு ஆதரவாகவும் கோஷம் எழுப்பிய மற்றொரு ஊழியரான இப்தில்லா அபுசத்தும் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com