இந்தியாவின் உதவி 'நன்கொடை அல்ல' திருப்பி அளிக்க வேண்டும்- இலங்கை

இந்தியாவிடம் பெற்ற கடன்களை நாம் கண்டிப்பாக திருப்பி செலுத்த வேண்டும். இந்தியா அளிப்பது நன்கொடை இல்லை என்று இலங்கை பிரதமர் தெரிவித்தார்.
இந்தியாவின் உதவி 'நன்கொடை அல்ல' திருப்பி அளிக்க வேண்டும்- இலங்கை
Published on

கொழும்பு,

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இலங்கை சுதந்திரம் பெற்ற 1948-க்குப் பிறகு மிக மோசமான அளவுக்கு அந்நாட்டின் பொருளாதாரம் சென்றது. அன்னிய செலாவணி நெருக்கடியால் இறக்குமதி செய்யவும் போதிய பணம் இன்றி இலங்கை தவித்து வருகிறது. இதனால், உணவுப் பொருட்கள், எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. கடும் பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கைக்கு இந்தியா தாராளமாக உதவி அளித்து வருகிறது. இதன்படி, உணவுபொருட்கள், மருந்துகள், எரிபொருள் போன்றவற்றை இலங்கை இந்தியாவிடம் கடனாக பெற்ற தொகை மூலம் இறக்குமதி செய்து வருகிறது.

இத்தகைய நெருக்கடிக்கு மத்தியில் இலங்கை நாடாளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- இந்தியாவின் கடனுதவி திட்டத்தின் கீழ் நாம் 31 ஆயிரம் கோடி அளவுக்கு கடனாக பெற்றுள்ளோம். மேலும் கடனுதவி அளிக்க வேண்டும் என்று இந்திய தலைவர்களிடம் நாம் கோரிக்கை விடுத்துள்ளோம். ஆனால் இந்தியாவாலும் இந்த முறையில் தொடர்ந்து உதவி அளிக்க முடியாது. அவர்கள் அளிக்கும் உதவிக்கு சில வரமுறைகள் உள்ளன. மறுபுறம் இந்தியாவிடம் பெற்ற கடன்களை நாம் கண்டிப்பாக திருப்பி செலுத்த வேண்டும். இந்தியா அளிப்பது நன்கொடை இல்லை.

எரிபொருள், எரிவாயு, மின்சாரம் மற்றும் உணவுப் பற்றாக்குறைக்கு அப்பால் இலங்கை இப்போது மிகவும் கொடிய நிலைமையை எதிர்கொண்டுள்ளது. நமது பொருளாதாரம் முற்றிலும் சீர்குலைந்துள்ளது. நமக்கு முன்னால் இருக்கும் மிகத்தீவிரமான பிரச்சினை இதுதான். இலங்கை பொருளாதாரம் மீட்சி அடைவதன் மூலம் இந்த பிரச்சினைகளை தீர்க்க முடியும். இதற்காக அன்னிய செலவாணி நெருக்கடியை நாம் முதலில் தீர்க்க வேண்டும்" என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com