இனவெறியில் இந்திய என்ஜினீயர் கொலை: அமெரிக்க கடற்படை முன்னாள் வீரருக்கு 3 ஆயுள் சிறை தண்டனை

இனவெறியில் இந்திய என்ஜினீயர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அமெரிக்க கடற்படை முன்னாள் வீரருக்கு 3 ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இனவெறியில் இந்திய என்ஜினீயர் கொலை: அமெரிக்க கடற்படை முன்னாள் வீரருக்கு 3 ஆயுள் சிறை தண்டனை
Published on

நியூயார்க்,

அமெரிக்காவில் கன்சாஸ் மாகாணம் ஒலாத்தே என்ற இடத்தில் உள்ள மது பாரில் இந்திய என்ஜினீயர் சீனிவாஸ் குச்சிபோட்லா, அவரது நண்பர் அலாக் மதசானி ஆகிய 2 பேரையும் அமெரிக்க கடற்படை முன்னாள் வீரர் ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் சீனிவாஸ் குச்சிபோட்லா உயிரிழந்தார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 22ந் தேதி நடந்த இந்த இனவெறி தாக்குதல், அங்கு உள்ள இந்திய சமூகத்தினர் மத்தியில் மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த தாக்குதலை நடத்திய அமெரிக்க கடற்படை முன்னாள் வீரர் ஆதம் புரிண்டன் (வயது 53) உடனடியாக கைது செய்யப்பட்டார். அவர்மீது அங்கு உள்ள ஜான்சன் கவுண்டி மாவட்ட கோர்ட்டில் கொலை வழக்கு தாக்கலானது. இந்த வழக்கு விசாரணையின் போது தன் மீதான குற்றச்சாட்டை ஆதம் புரிண்டன் ஒப்புக்கொண்டார்.

இநத நிலையில், அவர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளதாக கருதிய கோர்ட்டு, அவருக்கு 3 ஆயுள் சிறை தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு அளித்தது. இந்த தண்டனையை அவர் தொடர்ச்சியாக அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com