

இஸ்லாமாபாத்,
காஷ்மீரின் புல்வாமாவில் துணை ராணுவ வீரர்கள் மீது நடந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் இந்திய ராணுவம் இன்று ஈடுபட்டது. பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பயங்கரவாதிகள் முகாம் மீது 1,000 கிலோ அளவிலான குண்டுகளை இந்திய விமானப்படை இன்று வீசியது. இந்திய விமான படையின் மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் மூலம் இன்று அதிகாலை 3.30 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில், தீவிரவாதிகள், தீவிரவாத பயிற்சி பெறுவோர் மற்றும் மூத்த தளபதிகள் உள்பட 300க்கும் மேற்பட்ட தீவிரவாத இயக்கத்தினர் கொல்லப்பட்டனர் என தகவல் வெளியானது.
இந்த நிலையில், பாகிஸ்தான் நாட்டின் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை மந்திரி சவுத்ரி பவாத் உசைன் செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, இந்திய திரைப்படங்கள் பாகிஸ்தானில் திரையிடப்படாது. நாட்டின் திரைப்பட கூட்டமைப்பினர் இந்திய திரைப்படங்களை புறக்கணித்திடுவார்கள் என கூறினார்.
இதேபோன்று இந்திய தயாரிப்பு விளம்பரங்களையும் தடை செய்ய பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையத்திற்கு உத்தரவிடப்பட்டு உள்ளது என அவர் கூறினார்.
தீவிரவாத தாக்குதலை அடுத்து டோட்டல் தமால், லூகா சுப்பி, அர்ஜுன் பாட்டியாலா, நோட்புக் மற்றும் கபீர் சிங் ஆகிய படங்களின் தயாரிப்பாளர்கள் அண்டை நாடான பாகிஸ்தானில் தங்களது படங்கள் திரையிடப்படாது என அறிவித்தனர்.