

மஸ்கட்
ஓமனின் அரசு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ஓமன் வளைகுடா பகுதியில் மஸ்கட் நகர கடலோரத்தில், மார்ஷல் தீவுகளின் கொடியுடன் கூடிய எண்ணெய் கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதனை வெடிகுண்டுகளுடன் கூடிய ஒரு டிரோன் இன்று கடுமையாக தாக்கியது என தெரிவித்து உள்ளது.
இந்த சம்பவத்தில் கப்பலில் இருந்த இந்தியர் ஒருவர் பலியாகி உள்ளார். ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக நேற்று முன்தினம் கடுமையாக தாக்கியது. இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டு உள்ளனர்.
ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோர் கொல்லப்பட்டனர். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினரும் கொல்லப்பட்டு உள்ளனர்.
இதனையடுத்து, ஹார்முஜ் ஜலசந்தி பகுதியை நெருங்க கூடிய கப்பல்களை ஈரான் அச்சுறுத்தி வருகிறது. மத்திய கிழக்கில் பதற்றம் நிறைந்த சூழலில், பெர்சியன் வளைகுடாவின் குறுகலான நுழைவு பகுதியில் ஈரான் பல்வேறு தாக்குதல்களை நடத்தியிருக்க கூடும் என நம்பப்படுகிறது.