துபாயில் சிக்கித் தவிக்கும் இந்திய மருத்துவ பணியாளர்கள் - மத்திய அரசு நடவடிக்கை எடுக்க கேரள முதல்-மந்திரி வலியுறுத்தல்

இந்திய மருத்துவ பணியாளர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் விசா தொடர்பான சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர்.
துபாயில் சிக்கித் தவிக்கும் இந்திய மருத்துவ பணியாளர்கள் - மத்திய அரசு நடவடிக்கை எடுக்க கேரள முதல்-மந்திரி வலியுறுத்தல்
Published on

திருவனந்தபுரம்,

துபாயில் உள்ள ஈரானிய மருத்துவமனை மூடப்பட்டதைத் தொடர்ந்து, அந்த மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இந்தியர்கள் விசா தொடர்பான சிக்கல்களால் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு, அவர்களை இந்தியாவிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி பிரதமர் மோடிக்கு கேரள முதல்-மந்திரி வி.டி.சதீசன் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது;-

“துபாயில் உள்ள ஈரானிய மருத்துவமனையில் பணிபுரிந்த, பெரும்பாலும் கேரளாவைச் சேர்ந்த இந்திய சுகாதாரப் பணியாளர்கள் குழுவின் சார்பாக, மத்திய அரசின் அவசர தலையீட்டைக் கோரி இந்த கடிதத்தை எழுதுகிறேன். அங்கு சிக்கியிருப்பவர்கள் தற்போது மிகவும் வேதனையான ஒரு சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளனர்.

சமீபத்திய பிராந்திய நிகழ்வுகளுக்கு மத்தியில் மருத்துவமனை மூடப்பட்டதைத் தொடர்ந்து, அங்குள்ள செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களில் பலர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விசா தொடர்பான சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர். இதன் விளைவாக, பல ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழ்ந்து பணிபுரிந்த குடும்பங்கள் இப்போது நிச்சயமற்ற தன்மை, நிதி நெருக்கடி மற்றும் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயத்தை எதிர்கொள்கின்றன.

இந்தப் பணியாளர்கள், கொரோனா பெருந்தொற்று காலத்திலும், சுகாதாரத்துறையில் முன்களப் பணியாளர்களாக நின்று, அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளனர். சுகாதார அமைப்புக்கு அவர்கள் ஆற்றிய பங்களிப்புகளும், உள்ளூர் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடப்பதில் அவர்கள் காட்டிய நேர்மையும், அவர்களின் தற்போதைய இக்கட்டான நிலையை கவனத்திற்குரியதாக ஆக்குகின்றன.

பாதிக்கப்பட்ட பல நபர்கள் தற்போது அந்த நாட்டில் தங்குவதற்கான சலுகைக் காலத்தின் முடிவை நெருங்கி வருகின்றனர். அவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்படலாம் என்றும், இது அவர்களின் எதிர்கால வேலைவாய்ப்புகளையும் தொழில்முறை உரிமங்களையும் பாதிக்கக்கூடும் என்றும் அஞ்சுகின்றனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கள் வாழ்க்கையையும், குழந்தைகளின் கல்வியையும் சார்ந்துள்ள எண்ணற்ற மலையாளி குடும்பங்களிடையே இந்த நிலைமை பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பிரச்சினையின் மனிதாபிமான அம்சங்களையும், வெளிநாடுகளில் உள்ள இந்தியக் குடிமக்களின் நலனையும் கருத்தில் கொண்டு, வெளியுறவு அமைச்சகம் இவ்விஷயத்தை ஆராய்ந்து, நியாயம் மற்றும் கருணையின் அடிப்படையில் ஒரு தீர்வைக் காண்பதற்காக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்று நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com