இந்திய செவிலியருக்கு ஏமனில் விரைவில் மரண தண்டனை நிறைவேற்றம்

நிமிஷா பிரியா ஏமன் தலைநகர் சனாவில் இருக்கும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்திய செவிலியருக்கு ஏமனில் விரைவில் மரண தண்டனை நிறைவேற்றம்
Published on

சனா,

கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர், நர்ஸ் நிமிஷா பிரியா, 36. இவர் மேற்காசிய நாடான ஏமனில் நர்சாக பணிபுரிந்து வந்தார். கடந்த 2014ல் அவரது கணவர் மற்றும் பெண் குழந்தை இந்தியாவுக்கு திரும்பினர். அந்த ஆண்டில் ஏமனில் உள்நாட்டு போர் ஏற்பட்டதால், நிமிஷா பிரியாவால் உடனடியாக நாடு திரும்ப முடியவில்லை.

கடந்த 2017 ம் ஆண்டு ஏமனில் நர்சாக பணியாற்றிய போது, அந்நாட்டை சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவரை கொலை செய்த குற்றச்சாட்டில் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. அது முதல் அவர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரது மேல்முறையீட்டு மனுக்கள் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டு வந்தன.

நிமிஷா பிரியாவின் தாய் மகளை மீட்க தொடர்ந்து போராடி வருகிறார். ஏமன் நாட்டு சட்டப்படி ( இறந்தவரின் குடும்பத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களிடம் மன்னிப்புக் கேட்டு அவர்கள் கேட்கும் நஷ்ட ஈடாக பணம் வழங்குவதுடன், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் மன்னித்தால் குற்றவாளியின் தண்டனை தள்ளுபடி செய்யப்படும்) எனும் வழக்கம் உள்ளது. இதனை பயன்படுத்தி, நிமிஷா பிரியாவை காப்பாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இந்தநிலையில், ஏமன் நாட்டில் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு வரும் 16ம் தேதி தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்நாட்டைச் சேர்ந்த தலால் மஹ்தி என்பவர் துன்புறுத்தவே நிமிஷா கொடுத்த மயக்க மருந்தில் அவர் உயிரிழக்க கொலை வழக்கானது.

நிமிஷா பிரியாவின் சிக்கலுக்கு காரணம் என்ன?

உள்நாட்டுப்போர் நடக்கும் ஏமன் நாட்டில், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசு பதவியில் இல்லை. செங்கடலில் சரக்கு கப்பல்கள் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தும் ஹவுதி பயங்கரவாதிகள் தான், தலைநகர் சனா உள்ளிட்ட இடங்களை கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அவர்களது அரசை இந்தியா அங்கீகரிக்கவில்லை. தெற்குப்பகுதியில் ஏடன் உள்ளிட்ட நகரங்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அரசு தான் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளது. டெல்லியில் இருக்கும் ஏமன் துதரகமும் இந்த அரசின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. தலைநகர் சனாவில் இருக்கும் சிறையில் தான் நிமிஷா பிரியா அடைக்கப்பட்டுள்ளார். இதனால் அரசுடன் பேச்சு நடத்தி அவரை விடுவிப்பதில் சிக்கல்கள் நீடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com