

வாஷிங்டன்,
நாசாவில் பணியாற்றும் இந்திய வம்சாவளி வீரர் 14-ந்தேதி விண்வெளிக்கு பயணம் மேற்கொள்கிறார்.
அமெரிக்காவின் விண்வெளி கழகமான நாசாவில் பணியாற்றி வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த அனில் மேனன் (வயது 49) வருகிற 14-ந்தேதி சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
கஜகஸ்தானின் பைக்கானூர் ஏவுதளத்தில் இருந்து ஏவப்படவுள்ள சோயுஸ் எம். எ ஸ் - 29 விண்கலம் மூலம் அனில் மேனன், ரஷியாவின் பியோத்தர் துப்ரோவ் மற்றும் அன்னா கிகினா ஆகியோர் விண்வெளிக்கு செல்கிறார்கள். அனில் மேனன் இந்த 8 மாத காலம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
அமெரிக்காவில் குடியேறிய இந்திய-உக்ரைன் பெற்றோருக்கு பிறந்த அனில் மேனன், மருத்துவம், ராணுவம், மனித விண்வெளி பயணம் ஆகிய துறைகளில் படிப்பை முடித்துள்ளார். அவர் அமெரிக்க விண்வெளிப் படை கர்னலாக பணியாற்றியவர்.
அவர் அமெரிக்க விமானப் படையில் பணியாற்றியபோது ஆப்கானிஸ்தானில் முன்னணிப் படையில் இருந்தார். மேலும், மீட்பு சங்கத்திற்காக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் மலையேறுபவர்களைப் பராமரிக்கும் பணியிலும் ஈடுபட்டார். போலியோ தடுப்பூசி முயற்சிகளைப் பற்றி ஆய்வு செய்வதற்கும் ஆதரவளிப்பதற்கும் ரோட்டரி தூதரக அறிஞராக இந்தியாவில் ஒரு ஆண்டு இருந்தார். கடந்த 2014-ம் ஆண்டு நாசாவில் விமான அறுவை சிகிச்சை உள்ள நிபுணராக சேர்ந்தார்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் வீரர்களுக்கு உதவினார். பின்னர் 2018-ம் ஆண்டு ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றினார்.2021-ம் ஆண்டு நாசா விண்வெளி வீரராக தேர்வு செய்யப்பட்டு 2 ஆண்டு பயிற்சி திட்டத்தை முடித்து தற்போது தனது முதல் பயணத்தை மேற்கொள்ள உள்ளார்.
அனில் மேனனின் மனைவி வில்ஹெல்மும் அன்னா ஒரு விண்வெளி வீராங்கனை ஆவார். அவர் கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் விண்கலத்தில் விண்வெளிக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.