

கொழும்பு,
இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் 2 நாள் அரசு முறை பயணமாக இன்று இலங்கை சென்றுள்ளார். 49 பேர் அடங்கிய தூதரக அதிகாரிகள் குழுவுடன் இலங்கை சென்ற சி.பி.ராதாகிருஷ்ணனை, விமான நிலையத்தில் அந்நாட்டின் விளையாட்டுத்துறை மந்திரி சுனில் குமார கமகே மற்றும் பல்வேறு முக்கிய அதிகாரிகள் நேரில் சென்று வரவேற்றனர்.
இந்தியாவின் துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக சி.பி.ராதாகிருஷ்ணன் இலங்கைக்கு சென்றுள்ளார். தொடர்ந்து இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகேவை சி.பி.ராதாகிருஷ்ணன் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது இருநாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
குறிப்பாக இந்திய அரசின் உதவியுடன் இலங்கையில் மேற்கொள்ளப்படும் வீட்டுவசதித் திட்டம் மற்றும் இலங்கையில் டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்காக இந்தியா வழங்கிய 450 மில்லியன் டாலர் நிதியுதவியின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், இலங்கையில் உள்ள தமிழர்களுக்கான மறுவாழ்வு திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகள் குறித்து இரு தலைவர்களும் விரிவாக கலந்துரையாடினர்.