

வாஷிங்டன்,
இந்தியாவில் தகவல் அறியும் உரிமை இயக்கத்தில் கடந்த 20 ஆண்டுகால உறுப்பினராக இருப்பவர் அஞ்சலி பரத்வாஜ். அவர் சடார்க் நாகரீக சங்கதன் என்ற அமைப்பு ஒன்றையும் தோற்றுவித்து நடத்தி வருகிறார்.
அரசில் வெளிப்படை தன்மை மற்றும் பொறுப்புணர்வு ஆகியவற்றை ஊக்குவிக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பில், குடிமக்கள் ஆர்வமுடன் பங்கேற்க ஊக்கமளிக்கப்படுகின்றனர்.
அவரது தலைமையின் கீழ், பொது துறை ஊழியர்களின் பொறுப்புகள் மற்றும் பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர்களது செயல்பாடுகள் ஆகியவை பற்றிய அறிக்கைகள் அடங்கிய விவரங்கள் கொண்ட பட்டியல் தயார் செய்யப்படும்.
இதுதவிர ஊழலை வெளி கொண்டுவருவோர் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் செய்வோரை வெளிப்படுத்துவோர் ஆகியோரை பாதுகாக்கும் வகையில் பாதுகாப்பு சட்டங்களை உருவாக்கும் பணியை வெற்றிகரம் ஆக செய்து வந்துள்ளார்.
இந்த பணிகளுக்காக அமெரிக்க அதிபர் பைடன் தலைமையிலான அரசு, அவருக்கு சர்வதேச ஊழல் ஒழிப்பு சாம்பியன்ஸ் விருது வழங்கி கவுரவித்து உள்ளது. இதனை அமெரிக்க வெளியுறவு மந்திரி அந்தோணி பிளிங்கன் அறிவிப்பு ஒன்றில் தெரிவித்து உள்ளார்.