

நியூயார்க்,
அமெரிக்காவின் கென்டகி நகரில் ஆஷ்லேண்ட் பகுதியில் தி கிங்ஸ் டைனர் என்ற பெயரில் உணவு விடுதி வைத்து நடத்தி வருபவர் தாஜ் சர்தார். இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கியரான இவரது உணவு விடுதியில் வீட்டில் சமைக்கப்படும் உணவுகள் மற்றும் இந்திய உணவு வகைகள் ஆகியவை கலந்து விற்பனை செய்யப்பட்டு வந்தன.
இந்த நிலையில் இங்கு சாப்பிட்டு விட்டு சென்ற வாடிக்கையாளர் ஒருவர், உணவு விடுதி உரிமையாளரான சீக்கியர் மீது இனவெறி அடிப்படையிலான விமர்சனங்களை பேஸ்புக்கில் வெளியிட்டு உள்ளார்.
அவர் உணவு விடுதியின் புகைப்படம் ஒன்றை பேஸ்புக்கில் வெளியிட்டு, வழங்கப்பட்ட உணவின் மீதும் மற்றும் விடுதியில் இருப்பவர்கள் மீது தனக்கு ஏற்பட்ட அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளார்.
அவர், இறைச்சி உணவு ஆர்டர் செய்ய தயக்கத்துடன் விடுதிக்குள் சென்றேன். இந்தியாவில் இருந்து வந்த பழங்குடியினத்தினை சேர்ந்த ஒருவர் என்னை வரவேற்றார். அல் கொய்தா அமைப்பிற்கு நான் நிதியுதவி அளித்து உள்ளேன் என்பதற்காக நான் அவமானம் அடைந்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.
இதுபற்றி சர்தார் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த 2010ம் ஆண்டில் இருந்து இங்கு வசித்து வருகிறேன். என்னை இங்கிருந்து வெளியேற்றுவதற்காக, அவரது ஆதரவாளர்கள் ஒன்று சேர முயற்சிக்காமல் இருக்க வேண்டும் என நான் நம்பிக்கையுடன் இருந்தேன் என தெரிவித்து உள்ளார்.
ஆனால், இந்த இனவெறி விமர்சனத்தினை அடுத்து அவருக்கு சமூக ஆதரவு அதிகரித்து உள்ளதுடன் இரட்டிப்பு வர்த்தகமும் நடந்து வருகிறது. தனக்கு கிடைத்த அன்பிற்காக நன்றியுடையவனாக இருக்கிறேன் என கூறியுள்ள அவர் தனது குடும்பத்தின் பாதுகாப்பிற்காக காவல் துறையிடம் புகார் ஒன்றும் அளித்து உள்ளார்.
இதேவேளையில், ஆஷ்லேண்ட் நகர மேயர் கில்மோர் மற்றும் நகர ஆணையாளர்கள் 3 பேர் சர்தாரை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்து உள்ளனர்.