

நியூயார்க்,
பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு இன்றிரவு பேசிய நிலையில், இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் ஒன்று இறுதி செய்யப்பட்டு உள்ளது என டிரம்ப் அறிவித்ததுடன், இந்தியாவுக்கான இறக்குமதி வரி 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதம் ஆக குறைக்கப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்து உள்ளார்.
ரஷியாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்வதை நிறுத்துவதற்கு பிரதமர் மோடி சம்மதம் தெரிவித்து உள்ளார் என்றும் ரஷியாவுக்கு பதிலாக வெனிசுலாவிடம் இருந்து எண்ணெய்யை வாங்க இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது என்றும் அறிவித்துள்ள டிரம்ப், இரு நாடுகளுக்கு இடையேயான உறவு வலிமையாக உள்ளது என்றும் கூறினார்.
இதன்பின்னர் டிரம்ப், அவருடைய ட்ரூத் சோசியல் சமூக ஊடகத்தில் வெளியிட்டு உள்ள செய்தியில், என்னுடைய சிறந்த நண்பர்களில் பிரதமர் மோடியும் ஒருவர்.
அவருடைய நாட்டின் ஒரு சக்தி வாய்ந்த மற்றும் மதிப்பு மிக்க தலைவராக பிரதமர் மோடி திகழ்கிறார். நாங்கள் இருவரும் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விசயங்களை பற்றி பேசினோம். ரஷிய-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது பற்றியும் பேசினோம் என்றார்.
நட்பு மற்றும் பிரதமர் மோடியுடனான மதிப்பை கடந்து, அவர் கேட்டு கொண்டதற்காக, உடனடியாக இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்த நாங்கள் ஒப்பு கொண்டோம் என தெரிவித்து உள்ளார்.
இதேபோன்று, டிரம்ப்புடனான பேச்சு பற்றி பிரதமர் மோடி கூறும்போது, என்னுடைய அன்பிற்குரிய நண்பர் டிரம்ப்புடன் பேசியது சிறப்பானது. இந்திய தயாரிப்பு பொருட்களுக்கான வரி 18 சதவீதம் என்ற அளவில் குறைக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி. இந்த வியக்க வைக்கும் அறிவிப்புக்காக 140 கோடி மக்களின் சார்பாக டிரம்ப்புக்கு பெரியதொரு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.
அவர் தொடர்ந்து, உலகின் இரு பெரும் பொருளாதாரங்கள் இணையும்போது மற்றும் உலகின் இரு பெரும் ஜனநாயக நாடுகள் இணைந்து பணியாற்றும்போது, நம்முடைய மக்களுக்கு அது பலனளிக்கிறது. பரஸ்பர நலனுக்கான ஒத்துழைப்பில் அளவற்ற வாய்ப்புகளை ஏற்படுத்தி தருகிறது என்றும் கூறினார்.
முன்னெப்போதும் இல்லாத வகையில் நம்முடைய நட்புறவை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வதற்காக டிரம்ப்புடன் நெருங்கி பணியாற்ற ஆவலாக காத்திருக்கிறேன் என்றும் கூறினார்.