

ஜகார்த்தா
இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு 5 பேர் பலியாகி உள்ளனர்.
இந்தோனேசியாவின் வடமேற்கே எண்டே பகுதியில் இருந்து 68 கி.மீ. தொலைவில் வடகடலோரத்தில் உள்ள புளோரெஸ் தீவில் இன்று அதிகாலை 3.28 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவானது.
இதனை தொடர்ந்து, அதே பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவானது. இதேபோன்று கிழக்கு நுசா தெங்கரா, தெற்கு சுலவேசி மற்றும் மேற்கு நுசா தெங்கரா மாகாணங்களில் சுனாமிக்கான எச்சரிக்கையும் விடப்பட்டது. இதனால், 1.6 முதல் 9.8 அடி வரை அலைகள் மேலே எழும்பும் என்று எச்சரிக்கையும் விடப்பட்டது. பின்னர் இது திரும்ப பெறப்பட்டது.
இந்நிலையில், சிக்கா பகுதியில் 2 பேர் மற்றும் மங்காராய் பகுதியில் 3 பேர் என மொத்தம் 5 பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலநடுக்கம் தொடர்ச்சியாக நகரங்கள், கிராமங்களில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டதுடன், தகவல் பரிமாற்றமும் பாதிக்கப்பட்டு உள்ளது.
இதனால், தேடுதல் மற்றும் மீட்பு பணிகளும் பாதிப்படைந்து உள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகள் மீட்கப்பட்டு வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.