

ஜகார்தா,
உலக அளவில் 18.51 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 40.03 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே இந்தோனேசியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தினசரி பாதிப்பு 20 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு உறுதி செய்யப்பட்டு வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் தற்போது இந்தோனேசியா 16-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில் இந்தோனேசியாவில் அதிகபட்ச அளவாக கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 31,189 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தோனேசியாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 23,45,018 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மேலும் 728 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 61 ஆயிரத்து 868 ஆக உயர்ந்துள்ளது.
இந்தோனேசியாவில் கொரோனா தொற்றில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 15,863 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளநிலையில், இதுவரை 19,58,553 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 3,24,597 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.