

ஜகார்த்தா:
இந்தோனேசியாவில் 240-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற பயணிகள் கப்பல் ஜாவா கடலில் திடீரென தொடர்பை இழந்தது. இதையடுத்து அந்த கப்பலை தேடும் பணியில் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள சுரபயா நகரில் இருந்து தெற்கு கலிமந்தான் மாகாணத்தின் தலைநகரான பன்ஜர்மாசின் நகரை நோக்கி ‘விர்கோ டிரான்ஸ்போர்ட் 8’ என்ற பயணிகள் கப்பல் புறப்பட்டது. நேற்று காலை 10.13 மணியளவில் சுரபயாவில் இருந்து புறப்பட்ட அந்த கப்பல், இன்று அதிகாலை 2 மணியளவில் தொடர்பை இழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். கப்பலில் 241 பயணிகள் இருந்ததாக அதன் பயணிகள் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கப்பலின் கடைசியாக கிடைத்த தரவுகளின்படி, ஜாவா கடலில், பன்ஜர்மாசின் துறைமுகத்தில் இருந்து சுமார் 148 கிலோமீட்டர் தொலைவில் இருந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து பன்ஜர்மாசின் மீட்பு குழுவினர் தேடுதல் நடவடிக்கையை தொடங்கினர்.மாயமான கப்பல் கடைசியாக இருந்ததாகக் கருதப்படும் பகுதிக்கு மீட்புக் கப்பல் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
அதிக எண்ணிக்கையிலான பயணிகள் மற்றும் பணியாளர்கள் கப்பலில் இருந்ததால், மீட்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. கப்பலில் இருந்தவர்களுக்கு என்ன ஆனது என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் வெளியாகவில்லை. உயிரிழப்பு குறித்தும் உடனடி தகவல் எதுவும் இல்லை