

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேர் பயன்படுத்தும் செயலிகளில் ஒன்றாக உள்ளது. புகைப்படம் மட்டும் பதிவேற்றும் செயலியாக இருந்த இன்ஸ்டாகிராமில் புதுப்புது வசதிகள் கொண்டு வரப்பட்டன. சில வினாடிகள் மட்டுமே ஓடக்கூடிய ரீல்ஸ் வீடியோக்கள், ஆடியோ, வீடியோ கால் வசதி, சாட்டிங் வசதி ஆகியவை இன்ஸ்டாகிராமில் கொண்டு வரப்பட்டன.
பயனர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள இன்ஸ்டாகிராம் தனது தனியுரிமை கொள்கையில் முக்கிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. எண்ட்-டூ-எண்ட் என்கிரிப்ஷன் அம்சம் நீக்கப்படுவதாக அறிவித்துள்ளது. கடந்த 2023-ல் இன்ஸ்டாகிராமில் எண்ட்-டூ-எண்ட் என்கிரிப்ஷன் அம்சம் டைரக்ட் மெசேஜில் அறிமுகமானது. இந்த நிலையில், வரும் மே 8 முதல் இந்த அம்சத்தை நீக்க இருப்பதாக இன்ஸ்டாகிராம் கூறியுள்ளது.
இந்த அம்சம் பரவலான பயனர்கள் பயன்படுத்தாத காரணத்தால் நீக்குவதாக மெட்டா தெரிவித்துள்ளது. எண்ட்-டூ-எண்ட் என்கிரிப்ஷன் நீக்கப்பட்டால், பயனர்கள் அனுப்பும் மெசேஜ்கள், தரவுகளை மெட்டாவால் பார்க்க முடியும். அதனை விளம்பர நோக்கத்திற்காகவும், கன்டென்ட்களை கவனிக்கவும், சட்ட ரீதியான கோரிக்கையின் அடிப்படையில் அதை பல்வேறு முகமைகளுக்கும் அனுப்ப முடியும். மெட்டாவின் இந்த முடிவு பயனர்களின் தனியுரிமையை மீறும் வகையில் இருப்பதாக பயனர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.