

ஈரான்-அமெரிக்கா இடையே தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில், இரு நாடுகளுக்கு இடையே பாகிஸ்தானில் நடந்த அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அணுசக்தி திட்டம் மற்றும் ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் ஈரானில் உள்ள துறைமுகங்களை முற்றுகையிடுவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார்.
ஹார்முஸ் நீரிணை அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது.இதனிடையே 2-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு ஈரான்-அமெரிக்கா ஒப்புக்கொண்டது. இன்று (வியாழக்கிழமை) நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த பேச்சுவார்த்தை பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் நடப்பது உறுதியாகியுள்ளது.
2-வது கட்ட பேச்சுவார்த்தைக்கு முன்பாக அமெரிக்கா தரப்பில் 2 புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதாவது:ஹார்முஸ் நீரிணையை எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி முழுவதுமாகத் திறக்க வேண்டும்.அமைதி ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கு, ஈரானின் தூதுக் குழுவானது அந்த நாட்டின் புரட்சிகர ராணுவ பாதுகாப்புப் படையின் முழுமையான அதிகாரத்தைப் பெற்றிருக்க வேண்டும்.
இதன் மூலம், ஈரான் தூதுக் குழுவுக்கு அமைதி ஒப்பந்தத்தை இறுதி செய்யும் அதிகாரம் இருந்தால் மட்டுமே பேச்சுவார்த்தைக்குத் திரும்புவோம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதற்கிடையே, தற்போது அமலில் இருக்கும் தற்காலிக போர் நிறுத்தத்தை நீட்டிக்க அமெரிக்காவும் ஈரானும் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பேச்சுவார்த்தையை சுமூகமாக முடிவுக்கு கொண்டு வர கூடுதல் நேரம் தேவைப்படும் என்பதை கருதி நீட்டிக்க ஆலோசிப்பதாக கூறப்படுகிறது.