கொரோனா வைரஸ் பாதிப்பு; ஈரானில் ஒரே நாளில் 43 பேர் உயிரிழப்பு

ஈரான் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் ஒரே நாளில் 43 பேர் உயிரிழந்து உள்ளனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பு; ஈரானில் ஒரே நாளில் 43 பேர் உயிரிழப்பு
Published on

தெஹ்ரான்,

சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் இன்று 90க்கும் கூடுதலான நாடுகளுக்கு பரவியுள்ளது. இதனால் உலகளவில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். உலகம் முழுவதும் 1 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து பலி மற்றும் பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

சீனாவுக்கு அடுத்து இத்தாலி, தென்கொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் இதன் பாதிப்பு அதிக அளவில் உள்ளது. ஈரானின் தெஹ்ரான், குவாம், கிலான் மற்றும் எஸ்பஹான் ஆகியவை அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளாக உள்ளன. தெஹ்ரானில் 1,945 பேரும், குவாம் நகரில் 712 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ஈரானில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 21 பேர் பலியாகினர். 1,076 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 145 ஆகவும், பாதிப்பு எண்ணிக்கை 5,823 ஆகவும் இருந்தது. பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என அந்நாட்டு சுகாதார அமைச்சக செய்தி தொடர்பு அதிகாரி கியானவுஷ் ஜஹான்பூர் அறிவிப்பொன்றில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று ஒரே நாளில் 49 பேர் வைரஸ் பாதிப்பிற்கு பலியானது அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை 194 ஆக உயர்ந்தது.

வைரஸ் பாதிப்பு விகிதம் குறைந்து வருகிறது என ஈரான் நாட்டு அரசு சார்பில் கூறப்படுகிறது. எனினும், வைரஸ் பாதிப்பினால் ஒரே நாளில் இன்று 43 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 237 ஆக உயர்வடைந்து உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 595 பேருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டு உள்ளது கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் பாதிப்படைந்தோரின் மொத்த எண்ணிக்கை 7,167 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட 2,394 பேர் சிகிச்சையில் நலமடைந்து உள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com