

தெஹ்ரான்,
அமெரிக்கா, ஈரான் இடையே மோதல்போக்கு அதிகரித்து வருகிறது. ஈரான் மீது தாக்குதல் நடத்தும் நோக்கில் அரபிக்கடலில் போர் கப்பல்களை அமெரிக்கா நிலைநிறுத்தியுள்ளது. அதேவேளை, ஈரான் பாதுகாப்புப்படையினர் தீவிர போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஈரானின் இஷ்பாஹன் மாகாணத்தின் டோர்சா பகுதியில் இன்று ராணுவ ஹெலிகாப்டர் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. ஹெலிகாப்டரில் 2 விமானிகள் பயணித்தனர். நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது ஹெலிகாப்டரில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
இதனால் அப்பகுதியில் உள்ள பழச்சந்தையில் (Fruit Market) ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஹெலிகாப்டர் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த 2 விமானிகள், பழச்சந்தையில் நின்றுகொண்டிருந்த 2 வியாபாரிகள் என மொத்தம் 4 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக பாதுகாப்புப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.