

தெஹ்ரான்,
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. இந்த மோதலில் ஈரானுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர் இஸ்ரேல் மீது தாக்குதலை தொடங்கினர்.
இதனால், இஸ்ரேல் - ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர் இடையே மோதல் ஏற்பட்டது. லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர், ஹிஸ்புல்லாவின் ஆயுதக்கிடங்குகள், கட்டுப்பாட்டு மையங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினரும் இஸ்ரேல் மீது அவ்வப்போது டிரோன்கள், ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் லெபனானில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு நேற்று காலை இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக லெபனானில் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் கட்டமைப்புகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பு மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு ஈரான் கண்டனம் தெரிவித்தது. மேலும், ஹிஸ்புல்லா மீதான தாக்குதலுக்கு பதிலடியாக நேற்று இரவு இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல் நடத்திய நிலையில் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்நிலையில், ஈரான் தனது வான்பரப்பை மூடியுள்ளது. மேலும், நாடு முழுவதும் உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவையை தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. அதேபோல், இஸ்ரேலில் பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.