ஈரான் டிரோன் தாக்குதல்: சவுதி அரேபியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தற்காலிகமாக மூடல்
துபாய்,
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் கூட்டாக ஈரான் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளன. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் காமேனி, அவரது குடும்பத்தினர் மற்றும் ஈரானின் முக்கிய தலைவர்கள் உட்பட சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்காவின் நேச நாடுகளாக உள்ள பஹ்ரைன், ஜோர்டான், குவைத், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் மீது ஈரான் தாக்குதல் மேற்கொண்டுள்ளது. இதனால் வளைகுடா நாடுகளில் பதற்றம் நிலவுகிறது.
குவைத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. அமெரிக்க தூதரகம் தீப்பற்றி எரிவதால் அங்கிருக்கும் பணியாளர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்திய நிலையில், தற்போது தூதரகம் மீதும் தாக்குதல் தொடங்கப்பட்டுள்ளது. பஹ்ரைனிலும் ஈரான் தாக்குதல் நடத்துவதால் அங்கு சைரன் ஒலிக்கப்பட்டு மக்கள் உஷாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சவுதி அரேபியா ராஸ் தனுராவில் உள்ள சவுதி அரம்கோ (Saudi Aramco) எண்ணெய் ஆலை மீது ஈரான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. ஆலையில் தீ பற்றி எரிந்த நிலையில், உடனடியாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. நிலைமை கட்டுக்குள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

