

தெஹ்ரான்
ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி 28-ந்தி முதல் நடத்தி வரும் தாக்குதலால், ஈரானில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து உள்ளனர். இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் தளங்கள் அமைந்த பகுதிகள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, உலக நாடுகளுக்கு சரக்கு கப்பல் செல்ல கூடிய முக்கிய ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதனால், உலக பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இஸ்ரேல் மற்றும் பிற நாடுகள் மீது ஈரான் ராக்கெட்டுகள், ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், இஸ்ரேலை நோக்கி ஏவிய ஈரானின் ஏவுகணையில் இந்திய மக்களுக்கு நன்றி என கைப்பட எழுதிய வாசகம் இடம் பெற்றிருந்தது.
இந்தியாவின் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், இடம் பெற்ற இந்த வாசகத்துடன், ஜெர்மனி, ஸ்பெயின், பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கும் நன்றி தெரிவிக்கும் வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. இதுபற்றிய வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது. ட்ரூ பிராமிஸ் 4 என்ற பெயரில் 83-வது முறையாக ஈரான் நடத்தி வரும் ராணுவ தாக்குதலின் ஒரு பகுதியாக இந்த செய்திகள் ஏவுகணைகளில் இடம் பெற்றுள்ளன.
இதேபோன்று, மும்பையிலுள்ள ஈரானின் தூதரகம் பகிர்ந்துள்ள சமூக ஊடக பதிவு ஒன்றில், அமெரிக்க மற்றும் இஸ்ரேலுக்கு பதிலடி தரும் வகையில் மேற்கொண்ட 83-வது ஏவுகணை தாக்குதலின்போது, அன்பும் ஆதரவும் அளித்த ஜெர்மனி, ஸ்பெயின், பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாட்டு மக்களுக்கு ஈரானின் வான்வெளி படை நன்றி தெரிவித்து கொள்கிறது என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது.
மேற்காசிய மோதலை பேச்சுவார்த்தை வழியே விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. எனினும், மோதல் தொடர்ந்து நீடித்து வருகிறது.